தமிழ் சினிமாவில் வரும் பேய் படங்களில் நகைச்சுவை அதிகமாகக் கலந்து வரும் நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக ரசிகர்களை நிஜமாகவே அச்சுறுத்தும் ஒரு தூய்மையான சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லராக வெளியாகியிருக்கிறது டார்க் திரைப்படம்.
கே. பாக்யராஜுக்குச் சொந்தமான ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த மூன்று இளைஞர்கள், எதிர்பாராத விதமாக ஒருவரையொருவர் மிகக் கொடூரமாகக் கொலை செய்து கொண்டு இறந்து போகிறார்கள். இந்த அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பிறகு, அந்த வீட்டிற்குள் நுழையவே அனைவரும் பயப்படுகிறார்கள். ஆனால், குறைவான வாடகை என்பதால், அந்த மர்மப் பின்னணியைத் தெரிந்தே துணிச்சலோடு அந்த வீட்டிற்குள் குடியேறுகிறார் நாயகன் அஜய் கார்த்திக்.
ஆரம்பத்தில் தைரியமாக இருக்கும் அஜய், சில நாட்களிலேயே அந்தப் பாழடைந்த வீட்டிற்குள் நடக்கும் விசித்திரமான அமானுஷ்ய நிகழ்வுகளைக் கண்டு நிலைகுலைந்து போகிறார். இதற்கிடையே, ஒரு நாள் அவரே தனக்குத்தானே பெரும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அவரைத் தொடர்ந்து வீட்டின் உரிமையாளரான கே. பாக்யராஜும் மரணமடைகிறார். இந்தத் தொடர் மரணங்களை விசாரிப்பதற்காகத் துடிப்பான காவல் அதிகாரி நட்டி (நடராஜ் சுப்ரமணியன்) அந்த இடத்திற்கு வருகிறார். அவர் உடல்களைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கும் போது, இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அஜய் கார்த்திக் திடீரென உயிர் பெற்று எழுந்து, நட்டியின் பெயரைச் சொல்லி எச்சரித்துவிட்டு மீண்டும் மயங்கி விழுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் நட்டி, தீவிர விசாரணையில் இறங்குகிறார். அதன் பின் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகளும், அந்த இளைஞர்களின் மரணத்தின் பின்னணியும்தான் இப்படத்தின் மீதிக்கதை!
ஆரம்பத்தில் கலகலப்பான ஒரு இளைஞனாக அறிமுகமாகும் அஜய் கார்த்திக், அந்த மர்ம வீட்டிற்குள் சென்ற பிறகு தன் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆபத்து நிறைந்த வீடு என்று தெரிந்தும் துணிச்சலோடு இருக்கும் அவர், அங்கு நடக்கும் விசித்திர நிகழ்வுகளால் நிலைகுலைந்து போகும் காட்சிகளில், தன் பயத்தை ரசிகர்களுக்கும் கடத்தியுள்ளார். நாளுக்கு நாள் அவரது உடல் மொழியிலும், மன அளவிலும் ஏற்படும் மாற்றங்களை மிக நேர்த்தியாகவும் அளவாகவும் கையாண்டு, படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார்.
வழக்கமான ஒரு குற்றப் பின்னணி கொண்ட வழக்கைக் கையாள்வது போல விசாரணையைத் தொடங்கும் காவல் அதிகாரி நட்டி, போகப்போக அதன் விசித்திரமான மர்மங்களைப் புரிந்துகொண்டு வியக்கும் காட்சிகளில் தன் தேர்ந்த நடிப்பால் அசத்தியுள்ளார்.

வீட்டின் உரிமையாளராக வரும் கே. பாக்யராஜ், தனக்கே உரிய பக்குவப்பட்ட நடிப்பாலும், திரையில் தோன்றும் காட்சிகளின் மூலமும் ஒட்டுமொத்தக் கதைக்கும் ஒரு நல் வழிகாட்டியாகத் திகழ்கிறார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறிய பாத்திரங்களை உணர்ந்து, கதையோடு இயைந்து எதார்த்தமாக நடித்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு ரசிகர்களின் மனதில் எளிதாகப் பதிகிறது.
ஒரே அறைக்குள் நகரும் கதையாக இருந்தாலும், ஒளியமைப்பைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார் கேமராமேன் ரவி சக்தி. குறைந்த வெளிச்சத்தில் , வழக்கமான இருட்டைக் காட்டாமல், அந்த இருட்டிற்குப் பின்னால் ஏதோ ஒரு ஆபத்து மறைந்திருப்பது போன்ற மர்ம உணர்வை ரசிகர்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்துகிறார்.
இசையமைப்பாளர் மனு ரமேஷின் மிரட்டலான பின்னணி இசைப் படத்தின் விறுவிறுப்பிற்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது. அளவான, காட்சிக்குத் தேவையான பின்னணி இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை கண்டபடி எகிற வைக்கிறது!
இயக்குநர் கல்யாண் கே. ஜெயன், ஆரம்பம் முதல் இறுதி வரை த்ரில்லர் மற்றும் திகில் உணர்வை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். காட்சிக்குக் காட்சி அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பைத் தக்கவைப்பதில் ‘டார்க்’ ரசிகர்களை முழுமையாகக் கவர்கிறது.
டார்க் – மிரட்டல்!












