சமூக அக்கறை கொண்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்திய சங்ககிரி ராஜ்குமார், தற்போது ‘ஒன் மேன்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கதைப்படி, வெவ்வேறு துறைகளில் அசாத்திய திறமை படைத்த துடிப்பான இளைஞர்கள் குழு ஒரு புதிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். எதிர்பாராதவிதமாக, அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றிற்குள் அவர்கள் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. அங்கே தற்செயலாக ஒரு வினோதமான, ஆள்நடமாட்டமில்லாத தொழிற்சாலை ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தத் தொழிற்சாலைக்குள் ஆராயும்போது, ஒட்டுமொத்த உலகத்தையே ஒடுக்கி உறைய வைக்கக்கூடிய ஒரு பயங்கரமான நாசகார தொழில்நுட்ப ஆற்றல் (Destructive Energy) அவர்களின் கைகளில் கிடைக்கிறது.
அந்த ஆபத்தான ஆற்றலைப் பயன்படுத்தினால், பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும், உயிரினங்களும் உடனடியாக மறைந்துவிடுவார்கள்; அந்தத் தொழில்நுட்பத்தை இயக்குபவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் எஞ்சியிருப்பார்கள். குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒட்டுமொத்த உலகமும் இப்படிப்பட்ட ஒரு மாயச் சூழலில்தான் இயங்கும் என்ற விசித்திர விதியை அவர்கள் கண்டறிகிறார்கள். இந்த விநாசகரமான திட்டத்தை உலகத்தில் செயல்படுத்த அந்த இளைஞர்கள் முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு, அவர்களின் முடிவு என்ன மாதிரியான விபரீதங்களை ஏற்படுத்தியது? உலகம் அழியாமல் தப்பித்ததா? அல்லது மனித இனம் மறைந்ததா? என்பதைப் பல யூகிக்க முடியாத திருப்பங்களுடன் விவரிக்கிறது இந்த ‘ஒன் மேன்’.
‘ஒன் மேன்’ என்ற தலைப்பிற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில், இத்திரைப்படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களான ராஜா, ரூபி, ஜாக், பூமா, ஜானி என ஐந்து வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இளைஞர்களாகவும், படத்தில் தோன்றும் மற்ற அனைத்துக் கதாபாத்திரங்களாகவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஒருவரே நடித்துள்ளார். “இது எப்படி சாத்தியம்?” என்று நமக்குள் எழும் அத்தனை கேள்விகளுக்கும், தற்கால நவீன தொழில்நுட்பங்களின் அசாத்திய வளர்ச்சியைக் கொண்டு மிக நேர்த்தியாக விடை அளித்துள்ளார்.

தான் நடிக்கும் காட்சிகளைத் தானே ஒளிப்பதிவும் செய்துள்ளார். கேமராவை ஆன் செய்துவிட்டு, அதற்கு முன்னே ஓடிச் சென்று நின்று, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்துவமான உணர்வுகளையும், முகபாவனைகளையும் அவர் பதிவு செய்துள்ளார். ஒரு காட்சியில் ஐந்து கதாபாத்திரங்களும் ஒன்றாகத் தோன்றும் போது, அவர்களின் நடிப்பு மற்றும் அசைவுகளைத் துல்லியமாகப் பொருத்துவதற்கு அசாத்தியமான திட்டமிடலும், தொழில்நுட்ப அறிவும், எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய உழைப்பும் தேவை. அதனை சங்ககிரி ராஜ்குமார் கம்பீரமாகச் செய்து காட்டியுள்ளார். கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் கைகளில்தான் சினிமா என்னும் ஆயுதம் இருக்கும், சாமானியர்களுக்கு அந்த மாய உலகத்தில் இடமில்லை என்ற காலங்காலமான கருத்தாக்கத்தை இந்த ஒற்றைப் படத்தின் மூலம் உடைத்தெறிந்துள்ளார்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு தனிமனித முயற்சி மட்டுமல்லாது, தற்கால சினிமா தொழில்நுட்பத்தின் அசாத்திய சாத்தியங்களையும் நாம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இந்த படத்தில் இடம்பெறும் கார், ரயில் பயணம், ஹெலிகாப்டர் மற்றும் விமானப் பயணங்கள், அதில் நிகழும் சாகசங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்திற்கான கிராபிக்ஸ் (VFX) பணிகளையும் இவரே செய்துள்ளார். பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக கிராபிக்ஸ் காட்சிகளில் ஆங்காங்கே வறுமை தெரிந்தாலும், அவருடைய திட்டமிடலில் இருக்கும் வலிமை நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது.
இவரிடம் பட்ஜெட் மட்டும்தான் பிரதான பிரச்சினையாக இருந்திருக்கிறது. ஆனால், அந்த பட்ஜெட் நிர்பந்தம்தான் அவரை இப்படி ஒரு உலக சாதனையைச் சாத்தியப்படுத்த வைத்துள்ளது. இவருக்குப் போதிய பட்ஜெட் சாத்தியப்பட்டிருந்தால், இயக்குநர் ஷங்கர் மற்றும் ராஜமௌலி போன்ற பிரம்மாண்ட இயக்குநர்களின் வரிசையில் இவர் பிரகாசித்திருப்பார் என்பது உறுதி. தான் பிரதானமாக ஏற்றுள்ள நான்கு கதாபாத்திரங்களுக்கும் நான்கு விதமான முகபாவனைகள், குரல் மாற்றங்கள் மற்றும் உடல்மொழிகளைக் கொடுத்து பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளார். இந்த அசாத்திய சாகசக் கதையின் ஊடாக அன்பைப் பற்றியும், மனிதாபிமானத்தைப் பற்றியும் மிகச் சிறந்த பாடத்தையும் எடுத்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாகவும், உழைப்பின் ரீதியாகவும் ஒரு தமிழன் நிகழ்த்தியுள்ள இந்த அசாத்திய உலக சாதனை முயற்சி, சினிமா விரும்பிகள் அனைவரும் கண்டிப்பாகத் தியேட்டரில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியப் படைப்பாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக, தியேட்டருக்குள் நம்பிச் செல்கிற எவரையும் இந்த ‘ஒன் மேன்’ ஏமாற்றாது; மாறாக ஆச்சரியத்திலும் வியப்பிலும் மட்டுமே ஆழ்த்தும்!












