சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு பிரசித்தி பெற்ற இன்ஃப்ளூயன்சராக வலம் வருபவர் நாயகி பவித்ரா (சான்வி மேகனா). இவரைக் காதலித்து கரம் பிடிக்கிறார் நாயகன் இளவரசன் என்கிற இளன் (இளன்). ஆனால், திருமணத்திற்குப் பிறகு வழக்கமாக நடக்கும் ஒரு விஷயத்திற்குப் பவித்ரா முட்டுக்கட்டை போடுகிறார். அதாவது, தனது சொந்தக் குடும்பத்தையும், வீட்டையும் விட்டுவிட்டுப் புகுந்த வீட்டிற்கு வர அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். காதலியின் பிடிவாதத்திற்கு இணங்கி, ‘வீட்டோடு மாப்பிள்ளையாக’ பவித்ராவின் வீட்டுக்குச் செல்கிறார் இளன்.
ஆரம்பத்தில் எல்லாம் ஜாலியாக நகர்வது போல் தெரிந்தாலும், இளனுக்குச் சரியான வேலை கிடைக்காத சூழலில் நிஜப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வருமானம் இல்லாததால், வேறு வழியின்றி அந்த வீட்டின் சமையல் முதல் அத்தனை வீட்டு வேலைகளையும் இளன் கவனிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில், காதலித்த மனைவியின் குடும்பத்தினர் அவரை ஒரு சாதாரண வேலைக்காரனைப் போல நடத்தி, ஒட்டுமொத்தப் பொறுப்புகளையும் அவர் மீதே சுமத்துகிறார்கள்.
தன் மகன் புகுந்த வீட்டில் படும் இந்த அவஸ்தையைக் கண்டு அதிர்ச்சியடையும் இளனின் தாயார் (கீதா கைலாசம்), தன் மகனை அந்த வீட்டில் இருந்து எப்படியாவது மீட்க அதிரடித் திட்டம் தீட்டுகிறார். “ஒரு பெண் புகுந்த வீட்டிற்குச் சென்று அத்தனை வீட்டு வேலைகளையும் செய்யும்போது தப்பாத சமுதாயம், ஒரு ஆண் மருமகனாக அதைச் செய்யும்போது ஏன் தவறாகப் பார்க்கிறது?” என்ற மிக முக்கியமான கேள்வியை இப்படம் முன்வைக்கிறது. இந்த முற்போக்குச் சிந்தனையால் இரு குடும்பங்களுக்கும் இடையே வெடிக்கும் கலாச்சார மோதல்களும், சச்சரவுகளும் எதில் போய் முடிகிறது என்பதை எதார்த்தமாகச் சொல்கிறது ‘ப்யார் பிரேமா கல்யாணம்’.
கதை, திரைக்கதை, இயக்கம் எனப் பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் இளன், இத்திரைப்படத்தில் ‘இளவரசன்’ என்ற முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்றுத் தமக்கேற்ற ஒரு நேர்த்தியான நடிப்புச் சூழலை உருவாக்கியுள்ளார். காதலில் விழுந்து தவிப்பது, காதலிக்காகத் தனது குடும்பத்தை விட்டு வீட்டோடு மாப்பிள்ளையாகச் செல்வது, சரியான வேலை தேடாமல் சோம்பேறித்தனமாக இருப்பது எனத் தொடங்கும் இவரது கதாபாற்றம், மாமியார் வீட்டில் ஒரு அடிமையைப் போல நடத்தப்படும்போது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. இறுதிக்கட்டங்களில் தாய்ப் பாசத்திற்காக உருகும் காட்சிகளில் ஒரு முழுமையான நடிகராக இளன் முத்திரை பதித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்துள்ள சான்வி மேகனா, இன்றைய தலைமுறைக்கேற்ற சுயசார்பு கொண்ட, தன் சொந்தக் காலில் நிற்க விரும்பும் ஒரு நவீனப் பெண்ணாகத் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒருபுறம் பெற்ற தாய், மறுபுறம் காதலித்த கணவன் என இருவருக்குமிடையே மாட்டிக்கொண்டு அவர் தவிக்கும் காட்சிகள் எதார்த்தம். இறுதிக்கட்டங்களில் ஈகோக்களைத் தூக்கியெறிந்து, குடும்ப வாழ்க்கை சுமுகமாகச் செல்ல அவர் மனம் மாறும் இடங்களில் மிக முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளார்.
இப்படத்தின் மிகப்பெரிய தூணாக விளங்குவது ‘சந்திரா’ என்ற மாமியார் கதாபாத்திரத்தில் வரும் மூத்த நடிகை ராதிகா சரத்குமார் தான். அவரது கம்பீரமான தோற்றமும், ஆளுமையும் அந்தப் பாத்திரத்திற்கு அசாத்திய வலு சேர்க்கிறது. ஆரம்பத்தில் அன்பாகப் பேசி, சாதுரியமாகத் தனது மருமகனைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கொஞ்சம் கொஞ்சமாக அடிமைப்படுத்தும் அவரது நெகட்டிவ் கலந்த நடிப்பு, திரைக்கதையின் விறுவிறுப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.
மறுபுறம், நாயகனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம், பாசம் நிறைந்த ஒரு சராசரித் தாயின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்துள்ளார். தன் மகனின் மகிழ்ச்சிக்காகவும் நிம்மதிக்காகவும் எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் அவரது நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது. இவர்களுடன், இளனின் கண்டிப்பான தந்தையாக வரும் எம்.எஸ். பாஸ்கர், ஒரு நடுத்தர வர்க்கத் தந்தையின் குணாதிசயங்களையும், அவரது எதிர்பாரப்புகளையும் தனது அக்மார்க் முதிர்ச்சியான நடிப்பால் மிகச் சரியாகத் திரையில் கொண்டு வந்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வயதான தாத்தா கதாபாத்திரத்தில் நகைச்சுவை ஜாம்பவான் செந்தில் வந்து அசத்தியுள்ளார். அவரால் எங்கும் நடக்க முடியாமல் உட்கார்ந்த இடத்திலேயே இருந்தாலும், தனது அசாத்திய உடல்மொழி மற்றும் முகபாவனைகள் மூலம் அனைத்து விதமான முற்போக்குக் கருத்துகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார். நாயகனின் நண்பன் ‘வினோத்’ கதாபாத்திரத்தில் வரும் யோகி பாபு மற்றும் அவரது மனைவி ஜோடி, உண்மையான புரிதல் கொண்ட தம்பதி என்றால் யார் என்பதை நாயகனுக்குத் தங்களது வாழ்க்கை மூலம் புரிய வைக்கிறார்கள். மேலும், இளனின் அண்ணியாக நடித்துள்ள மோகனப்பிரியா இறுதிக்காட்சியில் பேசும் வசனங்கள் மிகவும் அர்த்தமுள்ளவை; அவர் பேசும் கருத்துகளில் சமகாலப் பெண்களின் உண்மையான குரல் எதிரொலிக்கிறது. நடித்துள்ள அனைவருக்கும் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கான சமமான இடங்களை இயக்குநர் இளன் மிக நேர்த்தியாக உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
ரைஸ்ட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் நிகழ்விடங்கள் மற்றும் பின்னணிகள் அனைத்தும் இளமைத் தோரணம் கட்டி மிகவும் வண்ணமயமாகக் காட்சி இன்பம் தருகின்றன. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கே பாபுவின் கேமரா ஒட்டுமொத்தப் படத்தையும் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்டியுள்ளது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வழக்கம் போல இளமைத் துள்ளலோடு ஒலிக்கின்றன. கதையின் எமோஷனல் மற்றும் லவ் சீன்களுக்கு யுவனின் மியூசிக் கூடுதல் ஆன்மாவாக மாறியுள்ளது. இன்றைய காலக்கட்ட ஓடிடி படங்களில் இருக்கும் முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் காட்சிகளோ அல்லது இரட்டை அர்த்த வசனங்களோ எதுவும் இல்லாமல், ஒரு தூய்மையான குடும்பப் படமாக இப்படம் உருவாகி இருப்பது குடும்ப ரசிகர்களுக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. பிரதீப் ஈ. ராகவின் படத்தொகுப்பு இரு குடும்பங்களின் கதையையும் குழப்பமில்லாமல் விறுவிறுப்பாக நகர்த்த உதவியுள்ளது.
‘ப்யார் பிரேமா கல்யாணம்’ வெறும் ஒரு கலகலப்பான காதல் கதையாக மட்டும் நின்றுவிடாமல், சமகாலச் சமுதாயத்தின் நடுத்தரக் குடும்பச் சூழ்நிலைகளையும், ஆணாதிக்கச் சிந்தனைகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ள ஒரு நல்லதொரு முற்போக்கான படைப்பாக மாறியுள்ளது. ஆங்காங்கே கதையின் ஓட்டத்தினூடே, போகிற போக்கில் இன்றைய சமுதாயம் சிந்திக்க வேண்டிய கருத்துக்களையும் இயக்குநர் இளன் தூவி விட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் எவ்விதத் தயக்கமுமின்றி குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு தரமான எண்டர்டெய்னர் இது!












