“அடியே….பஞ்சு…..”
வாசலில் கால் வைத்ததுமே பெருங்குரல் எடுத்த பாப்பம்மா ஓட்டமும் நடையுமாக அந்த சின்ன குடிசைக்குள் பாய்ந்தாள்.
ஆட்டுகல்லில் பருத்திக்கொட்டையை போட்டு ஆட்டி பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்சவர்ணம் கொஞ்சம் கூட அவளை எதிர்பார்க்கவில்லை. பதறிப்போனாள்.
“என்ன மதினி……ஏன் இப்படி அரக்கப்பரக்க ஓடியாந்திருக்கீக .என்ன நடந்து போச்சு?” என்று கலவரப் பட்டவளாய் கேட்க,
பாப்பம்மாவுடன் வந்த செங்கோடன் அங்கு கிடந்த முக்காலியை எடுத்துப் போட்டு சவுகரியமாக உட்கார்ந்து கொண்டான்.அம்மாவிடம் இருந்த கவலை, பதட்டம் கொஞ்சம் கூட அவனிடம் இல்லை.
“என்னத்தடி சொல்ல….?”என்று ராகம் இழுத்த பாப்பு “விடிஞ்சதிலிருந்து முத்துவ காணலடி…..காணாமப் போயிட்டா பாதகத்தி!”என்று ஒப்பாரி வைக்க , நிலை குலைந்து போனால் பஞ்சு.
உடம்பு ஜில்லிட்டது…… கண்களில் பூச்சி பறந்தது. இதயத்துடிப்பு அதிகமாகியது. முந்தா நாள் தன்னையும் முத்துவை ‘கூட்டுக் களவாணிகள்’ என்று அய்யன் சொன்னதிலிருந்து அந்த வீட்டுப்பக்கம் அவள் தலை வைத்துக் கூட படுப்பதில்லை.
இப்போது முத்து காணாமல் போய்விட்டாள் என்று தன் வீட்டுக்கே வந்து பாப்பம்மாள் அழுது புலம்புகிறாள் என்றால்……
பஞ்சவர்ணத்துக்கு வாய் வரவில்லை.பாப்பம்மாள் இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ?
“ரெண்டு பெரும் ஒன்னுமண்ணாத்தானே திரிஞ்சிக ..உங்கிட்ட கூடவா ஒன்னுஞ் சொல்லாமப் போயிட்டா. களவாணிச்சிறுக்கிகளா நாடகமாடி ஆடுறிக?”
மகளை காணவில்லை என்கிற கவலை, துயரம்,துக்கம் பாப்புவை பைத்தியம் போல ஆக்கி இருந்தது.
புருஷன் ஆசைப்பட்டானே என்பதற்காக பருத்திப்பால் எடுத்துக் கொண்டிருந்த பஞ்சுவுக்கு இப்படி ஒரு சிக்கல். விடிந்து விடியாததுமாக வந்து சேர வேண்டுமா என்ன? காட்டுப்பக்கம் போயிருக்கிற புருஷன் மாயன் எந்த நேரத்திலும் வந்து விடலாம், அவன் வருவதற்குள் இவர்கள் போய் விட்டால் நல்லது.
“ஏன்டி ,,, நாங்கேட்கிறேனில்ல.. …. தேவாங்கு கவுந்து கிடக்கிற மாதிரி மொடங்கி கிடந்தா விட்ருவனா?…என்னடி நெனச்சிட்டிருக்கே….மொளகாப் பயலோட ஓட்டி விட்டுட்டியா சொல்லுடி” உலுக்க பஞ்சு அப்படியே அவள் காலில் ஒடுங்கி விழுந்தாள்.
“சத்தியமா சொல்றன் மதினி!..என் தாலி மேல சத்தியம்…முத்துவ பத்தி எனக்கு எதுவும் தெரியாது.அன்னிக்கி அவ சொல்லித்தான் நா வந்தேனே தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது.”என்று கதறினாள்.
எதுவுமே தெரியாது என்று தாலி மீது சத்தியம் செய்கிறவள் பொய் சொல்வாளா ? பாப்பம்மாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் அபார நம்பிக்கை..இருந்தாலும் மகளை காணவில்லையே என்கிற கவலை, எரிச்சல்.
“காட்டுக்குள்ள திரியிற களவாணிப் பயலுக்கு கூட்டிக்கொடுத்திட்டு சத்தியமாடி பண்றே… ? சதிராடுற சிறுக்கி………பொய் சொன்னின்னா பொக்குன்னு போய் சேர்ந்திடுவடி,,…..சீலக்காரி உக்கிரமானவ. உங்குடும்பம் வாரிசு அத்துப் போகும். கொள்ளி வச்சு குடம் உடைக்க புள்ள இருக்காது…”
அம்மா இப்படி அடுக்கடுக்காக சாபம் கொடுப்பது செங்கோடனுக்கு பிடிக்கவில்லை. வேகமாக எழுந்து அம்மாவின் கையைப் பிடித்தான்.
“என்ன பேச்சு பேசறே…முத்து மாதிரிதான் பஞ்சுவும்! வாழ வேண்டிய பொண்ணு..வம்பா சாபம் கொடுக்காதே.குத்தமத்தவன்னா கொடுத்த சாபம் நம்ம குடும்பத்து மீதே திரும்பிடும் .நாசம் நமக்குத்தான்,…….வா போவோம்”
” என்ன பேச்சு பேசறடா. ?உந்தங்கச்சி ஓடிப்போயிட்டாங்கிறது ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சா குடும்ப மானம் சிரிச்சிப் போயிரும்”
“அதுக்கு இந்த பொண்ணு பொணயா? பஞ்சுவுக்கு எதுவும் தெரியாது…வா,,போகலாம்.”
“இவளுக்கு வொன்னுந் தெரியாதா? வக்காலத்தாடா வாங்குறே?”
“அப்படியே வச்சுக்க …கிளம்பு!”
“அப்படின்னா நீயும் உள் கையா? உந்தங்கச்சி ஓடிப் போயிட்டாங் கிறது உனக்கு உறுத்தலியா?”
“உறுத்தல… வா……போவோம்.”
“உங்கப்பன் கிட்ட சொல்லிருக்கலாம்ல?”
“இனி சொல்லிட்டா போச்சு.”
“த்தூ “என்று துப்பிய பாப்பாம்மாளின் கையை பற்றி தர தர வென இழுத்துக் கொண்டு வெளியில் போனான் செங்கோடன்.
இனி நாளை.!