“பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் “என்று ரஜினி காந்த் ஏதோ ஒரு படத்தில் பாடுவாரே …அதைப்போல மாதேஸ்வரன் மலைப்பகுதியில் வானம் பொத்துக்கொண்டது,.காற்று பலமாக வீசாததால் மழை நின்று பெய்தது…விக்ரகத்தின் தலையில் அபிசேகம் செய்யப்படும் பால் பல்வேறு புறங்களில் வழிந்து ஓடுவது போல மலை உச்சியிலிருந்து மழை வெள்ளம் சரிவுகளை கீறிக்கொண்டு பல வழிகளில் பாய்ந்து ஓடியது .அவ்வப்போது பாறைகளையும் சேர்த்து உருட்டிக்கொண்டு சென்றதால் எதிர்த்து நிற்க முடியாத பலவீனமான மரங்கள் வேர் அறுத்து தற்கொலை செய்து கொண்டன.
மந்திகள்,மான்கள், காட்டுப்பன்றிகள், நரிகள் இப்படி இன்னும் பல மிருகங்கள் ஆங்காங்கே பொந்துகள் குகைகள்,இடுக்குகளுக்குள் புகுந்து கொண்டன,
வீரப்பனும் முத்துலட்சுமியும் தெப்பமாக நனைந்து விட்டனர்.அடர்ந்து படர்ந்திருந்த அந்த மலைக்காட்டில் இப்படி நனைவது வீரப்பனுக்குப் பழக்கம்தான் ! ஆனால் முத்து லட்சுமிக்கு?
இப்படி கஷ்டப்படவேண்டும் என்பது அவளின் தலை எழுத்தா?சின்னதாக ஒரு குடிசை இருக்கும்,அதில்தான் குடும்பம் நடத்த வேண்டியதிருக்கும் என்று நினைத்து முத்து ஓடி வந்திருப்பாளோ?….வெளியேறி வந்தவள் சீதனம் போல சின்ன சருவப்பானை கொண்டு வந்திருந்தாள்.அதில் மஞ்சள் ,குங்குமம் ,முல்லைப்பூ,பச்சரிசி சோப்பு,எல்லாம் பிளாஸ்டிக் பைகளில் இருந்தன.காட்டு வாழ்க்கை ,அதிலும் மறைந்து வாழும் வாழ்க்கையில் வீடாவது மேடாவது?
” முத்து யோச்சிக்காம வந்துட்டோமேன்னு நினைக்கிறியாம்மா?” என்றான் வீரப்பன்.
“ஊகும்!”
“வீடு ,கீடேல்லாம் இல்ல.அங்கங்கே டேரா போட்டுக்கிட்டு இருந்திருவோம்,ஒரு நாளைக்கு ரெண்டு,மூணு எடங்கள்ல கூட மாத்தி மாத்தி டேரா போட வேண்டியிருக்கும்.வண்டி கிண்டி எல்லாம் கிடையாது.மேடு பள்ளம் ஏறி இறங்கனும்.குறுக்குப் பாதை போட்டுக் கிட்டு போவோம். இதெல்லாம் தாங்குவியா புள்ள?”
“ம் “!
“அப்பன் ஆத்தாளை விட்டுட்டு வந்துட்டோமேன்னு கவலையா இருக்கா?”
“ஏம் மாமா இப்படியெல்லாம் கேக்கிறே? நீதான் எனக்கு எல்லாமேன்னுதானே ஓடியாந்திருக்கேன்!”
“நானும் அப்படித்தான்! கொள்ளைக்காரனா இருக்கலாம். குத்தவாளியா இருக்கலாம். ஆனா சத்புத்ரன் ! அந்த ராமன் கூட எனக்கு பின்னாடிதான்!உன்னைத் தவிர வேறு எவளையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்!”
“அயே…..அந்த சரோஜாதேவி மாதிரி ஒருத்தி வந்தாக்கூடவா?” யதார்த்தமாகத்தான் கேட்டாள்.அந்தக் காலத்தில் அஞ்சலி ,சரோஜாதேவி ராஜசுலோசனா ,பானுமதி இவர்கள்தான் கனவுக்கன்னிகள்.
“நக்கலாக் கூட இப்படி கேக்காத புள்ள! இந்த வீரப்பனுக்கு ஒரு சொல்தான்!” என்றவாறு அவளின் கையை அழுத்தினான்.
மலையின் வேகம் குறைந்தது. இருவரும் வனதேவதை கோவிலை நோக்கி நடந்தார்கள்.
வேப்ப மரத்தின் அடியில் மைல் கல் மாதிரி ஒன்று! கன்னங்கரேல் என இருந்தது.அதுதான் வனதேவதை.பக்கத்தில் சின்ன சூலம்! ஒரு மண் விளக்கு!யாரும் அவ்வளவாக வருவதில்லை.ஆதிவாசிகள் வந்து வழிபட்டுப் போவார்கள்.ஆடி அமாவாசைக்கு பன்றிகளை பலி கொடுப்பார்கள்.
சட்டைக்குள் வயிற்றுப்பக்கமாக மடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் பையை வெளியில் எடுத்தான் கூரைப்புடவை, சேலை, பாவாடை ,உள்பாடி,ரவிக்கை,அவனுக்கு வேட்டி,சட்டை,பனியன் ஜட்டி துண்டு,,,
அங்கேயே ஈரத்துணிகளை களைந்துவிட்டு புத்தாடைகளை போட்டுக் கொண்டனர்,
மண் விளக்கிலிருந்த தண்ணீரை கொட்டிவிட்டு சுத்தமாக துடைத்து கட்டிக் கற்பூரத்தை வைத்தான்.சின்ன சின்ன பிளாஸ்டிக் பொட்டலங்களில் விபூதி, குங்குமம். பிளாஸ்டிக் பேப்பரில் ஜாக்கிரதையுடன் சுற்றப்பட்டிருந்த தீப்பெட்டியை எடுத்து கற்பூரத்தை கொளுத்தினான்.
மஞ்சள் கயிற்றில் அரைப்பவுனில் தாலி. கற்பூரத்தின் மீது சுற்றிக் காட்டிவிட்டு முத்துலட்சுமியின் கழுத்தில் கட்டினான்.அவளின் நெற்றியில் விபூதி பூசி குங்குமம் வைத்தான் .தானும் அதே மாதிரி வைத்துக் கொண்டான்.
“கல்யாணம் முடிஞ்சிருச்சு புள்ள.!இனி நம்ம எடத்துக்கு போயிடலாம்.”
அவர்களின் கல்யாணத்துக்கு அந்த வனதேவதைதான் சாட்சி!
இனி நாளை……!