மறு வினாடி…!
யாருமே எதிர்பார்க்கவில்லை.
ரிவால்வாரை எடுத்த வீரப்பன் மின்னல் வேகத்தில் ஐந்து பேரையும் சட..சட என்று சுட்டுத் தள்ளிவிட்டான்.
ஆட்ட பாட்டமுடன் இருந்த கூட்டம் காணாமல் போனது.
ஆலமரத்து மேடை மீது நின்ற வீரப்பன் ஊருக்கு கேட்கிற மாதிரி உரத்த குரலில் சொல்கிறான் .
“என்ன எந்தப்பய எதிர்த்தாலும் சரி, இந்தக்கதைதான்! வீரப்பன் விடமாட்டான். நெஞ்சுக்குள்ள வச்சிருந்து கொன்னு போடுவேன்.இந்த காடு,மலை,எல்லாமே எனக்குத்தான்! இங்கே நடந்ததை கவர்மெண்டு ஆளுங்களுக்கு சாட்சி சொல்லப் போறவனுகளுக்கு இதே கதிதான்” என்று எச்சரித்த வீரப்பன் செத்துக் கிடந்த ஐந்து பிணங்களையும் பெரிய அரிவாளால் அவனே துண்டம் போட்டான்,மாட்டு வண்டியை பூட்டச்சொல்லி துண்டங்களை அள்ளிப் போட வைத்தான்.
அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் அந்த ராத்திரியில் ஊர்வலம் .பவுர்ணமி நிலவில் சந்து விடாமல் ஊர்வலம். பார்க்கத் தான் ஆள் இல்லை. கடைசியாக பாலாறில் துண்டங்களை வீசி எறிந்து விட்டு இருளுடன் இருளாக கலந்து விட்டனர்.
வீரப்பனுக்கு கவலையான கவலை.வெடி மருந்து கிடைக்கவில்லை.கருங்கல் குவாரிகளிலிருந்து கிடைத்து வந்த வெடி மருந்தும் ஜெலட்டின் குச்சிகளும் வரவில்லை. அவன் தொல்லை தாங்காமல் கப்பமும் கட்டி வந்தனர்.
இப்போது எல்லாமே நின்று விட்டது.
நூற்றுக்கணக்கில் குவாரிகள். பல அவனது எல்லைக்குள் !
இந்த பகுதிகளை கிடைக்கும் கிரானைட் கற்களுக்கு தைவான்,ஜப்பான் நாடுகளில் கடும்கிராக்கி,ஒரு நாளைக்கு மூணு கோடி வரை பிசினஸ். 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு..எல்லா குவாரிகளையும் கர்நாடக மாநில அரசு மூடச்சொல்லி விட்டது.
“என்னடா இப்படி பண்ணிப்புட்டானுக.வெடி மருந்து இல்லேன்னா நம்ப பொழப்பு நாதாரிப் பொழப்பு நாறிப்போயிடுமேடா!அர்ச்சுனா! என்ன பண்ணலாம்?” என்று தம்பியிடம் ஆலோசனை கேட்டான்.
“நீ நினைக்கிற அளவுக்கு பயப்பட எதுவுமில்ல.நம்மளோட நேருக்கு நேரா கவர்மெண்டால மோத முடியல.அதான் குவாரிகளை மூடச் சொல்லி உத்திரவு போட்டிருக்கான். எத்தனை நாளைக்குன்னு பார்க்கலாமே?” என்று சர்வ சாதாரணமாக சொன்னான் அர்ச்சுனன் .அப்போதைய கருநாடக முதல்வர் பங்காரப்பா.
அர்ச்சுனனுக்கு ஒரு நம்பிக்கை..அந்த உத்திரவு சீக்கிரமே பணால் ஆகிப்போகும் என்று நம்பினான்.குவாரி முதலாளிகள் சும்மா இருக்க மாட்டார்கள். அரசாங்கத்தை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள்.ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.ஆகவே பயப்படத் தேவை இல்லை என்பதாக வீரப்பனுக்கு விளக்கி சொன்னான்.
அவன் சொன்னதில் கால்வாசி நடந்தது.
பெங்களூரு விதான் சபாவை நோக்கி குவாரி முதலாளிகள் 600 லாரிகள், தொழிலாளர்களுடன் பேரணியாகப் போனார்கள். ஆனால் பங்காரப்பா இணக்கமாக இல்லை.
இதைப்பயன்படுத்திக்கொண்டு கர்நாடகப் போலீசும் தமிழகப் போலீசும் வீரப்பன் தேடுதலை கடுமையாக்கி விட்டன.
“அவனிடம் வேண்டிய ஆயுதங்கள் இருக்காது.தொடர்ந்து போராட முடியாது.சரண் அடைந்தாலும் அடையலாம் ஆகவே இதுதான் சரியான நேரம் இதை விட்டால்மறுவாய்ப்பு அரிதாகி விடும் “என்று கணக்குப் போட்டு முக்கிய வழிகளை போலீசார் அடைத்து விட்டனர்..
அடர்ந்த காட்டுக்குள் சென்ற கர்நாடகப் போலீஸ் படையினர் திக்குத் தெரியாமல் திண்டாடி பல நாட்கள் பட்டினி கிடந்து தைரியம் இழந்தனர்,,திரும்பிச்சென்றதுதான் கண்ட பலன்.
மாதேஸ்வரன் மலைப்பக்கமாக ஒரு இடம் .
வீரப்பன் அர்ச்சுனன், சேத்துக்குளி இன்னும் முப்பது பேர் இருக்கலாம் சிற்றாரில் குளித்து விட்டு கரை ஏறினார்கள்.
சூரியனை நோக்கி கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிட்டான் வீரப்பன், கண்களை திறந்தபோது எதிரில் நின்றவன் சேத்துக்குளி,
“பதினஞ்சு பேர் மட்டும் போதும்.ஓவாயனை சேத்துக்க.சரியான நேரமா பாத்து எறங்கனும். ரெண்டு கேன் சீமைத்தண்ணி ரெடியா இருக்கனும்”என்று அன்றைய தாக்குதல் பற்றிய விவரங்களை சேத்துக்குளியிடம் சொன்னான்.
என்ன நடந்தது. நாளை!