டி.எஸ்.பி. நரசப்பாவுக்கு முன்னதாகவே எஸ்.பி.பிபின் சொல்லி இருந்ததால் அவர்களை எதிர்பார்த்து எல்லையிலேயே காத்திருந்தார்.
வந்தவர்கள் ஓய்வெடுக்கவில்லை.அப்படியே ஒரு அறைக்குள் அடைந்துவிட்டனர். தீவிரமான ஆலோசனை. மணிக்கணக்கில் நடந்தது.
கடைசியில் கொக்குப்பாறை முடிவிலிருந்து ஒரு பிரிவும், துளசிக்கரைப் பகுதியில் இருந்து மற்றொரு பிரிவும் தேடுதல் வேட்டையில் இறங்க வேண்டும் என முடிவாகியது.
தேடுதல் வேட்டைக்குத் துணையாக மல்லண்ணா என்பவரை அனுப்பி வைப்பதாக சொன்னார் நரசப்பா.
அன்று இரவு யாருமே உறங்க வில்ல.வரைபடங்களை வைத்துக் கொண்டு வழி அமைப்பதிலும்,எந்தெந்த இடங்களில் முகாம்கள் அமைப்பது என்பதிலும் மல்லண்ணாவைக் கேட்டு குறித்து வைத்துக் கொண்டார்கள்.
சூரியன் உதிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரண்டு பிரிவினரும் புறப்பட்டு விட்டனர்.
அவர்களின் கவனமெல்லாம் சிற்றோடைகள் சுனைகள் மீதே இருந்தன.காலைக்கடன்களை கழிப்பதற்காக நீர் நிலைகளைத் தேடி வீரப்பன் கோஷ்டியனர் வரலாம் என்கிற எதிர்பார்ப்பு.!
ஒருவனைக்கூட காணோம்.!
பிபின் தைரியம் சொன்னார்.
“சோர்வடைந்து விடக்கூடாது. முத நாளிலேயே எதிரிகள் கிடைச்சிட மாட்டாங்க. பெரிய காட்டுல அவனுங்கள கண்டு பிடிக்கிறது கஷ்டம்தான்.கண்டு பிடிச்சிட்டா உண்டு இல்லைன்னு பார்த்திடனும்.நோ மெர்சி!”
இரண்டாவது நாள் தேடுதல் வேட்டை முதல் நாளைப்போலவே தொடங்கியது.எஸ்.பி. பிபினுக்குப் பதில் டி.எஸ்.பி. நரசிப்பா.
சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ், சந்திரப்பா, ராமலிங்கம் ,ஜெகநாதன்,கிருஷ்ணா அர்ஸ்.ஆகிய ஐவரும் ஒரு ஜீப்பில் கோபி நத்தம் புறப்பட்டனர். உதவியாக கான்ஸ்டபிள் மல்லண்ணா.ரேஞ்சு ஆபிசர் சீனிவாசமூர்த்தி, ஆகியோரும் சேர்ந்து கொண்டனர்.
பாதையா அது? படு மோசம். காட்டுப்பாதை என்றால் மேடும் பள்ளமுமாகத்தான் இருக்கும்.ஆனால் இவ்வளவு மோசமாகவா? மண்டை சைசுக்கு பெரிய பெரிய கற்கள்.தள்ளாடியபடியே ஜீப் நகர்ந்தது.
அந்த நேரத்தில் யானை கீனை வந்தால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. யாரும் யூனி பார்மில் இல்லை.ஹொகனேக்கல் அருவிக்கு டூர் போகிறவர்கள் மாதிரியான பாவனை. ஆனால் தேவையான துப்பாக்கிகள் புல்லட்டுகள் எல்லாம் இருந்தன.
கோபிநத்தம் போவதற்குள் எல்லோருக்கும் குடல் அறுந்து விட்டது. ஜீப் குலுங்கிய குலுக்கலில் அத்தனை பேருக்கும் இடுப்பு கழன்று போனது மாதிரி வலி!
கோபி நத்தத்தில் ஏற்கனவே முகாமிட்டிருந்த ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேச்வரப்பாவை இவர்கள் சந்தித்து புதிய தகவல்களை தெரிந்து கொண்டனர். அவரும் தனது பங்குக்கு சங்கர் ராவ் , சிவகுமார் என்கிற இரண்டு கான்ஸ்டபிள்களை துணைக்கு அனுப்பி வைத்தார்.
தமிழ்நாடு எல்லையிலிருந்து ஹொகனேக்கல் 15 கிலோ மீட்டர் தூரத்தில்!
நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு பயணம் தொடங்கியது. எல்லோரையும் விட மிகவும் உற்சாகத்தில் இருந்தவர்.தினேஷ்தான் !
வீரப்பன் அங்கு இருப்பானா? தெரியாது! ஒரு எதிர்பார்ப்புதான்! எங்கிருக்கிறான் என்கிற தகவலும் இல்லை.அப்படி இருக்கும்போது இந்த தேடல் கோஷ்டிக்கு அவ்வளவு உற்சாகம்ஏன் ?
ஹொகனேக்கல் பால்ஸ்தான் காரணம்!
நாளை , வீரப்பன் அதிரடித் திட்டம்!