தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். இந்நிலையில்,கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரின் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்து அன்று இரவே கருணாநிதி கோபாலபுரம் திரும்பினார்.இந்நிலையில் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.இதையடுத்து ` சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அச்சப்படும் வகையில் ஏதுமில்லை. அவரது உடல்நிலைகுறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை சார்பில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில், “கருணாநிதியின் உடல் நலத்தில் வயது மூப்பின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாகக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கண்காணித்து வருகின்றனர் . இதற்காக, அவரது வீட்டிலேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் அனைவரும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர் இதையடுத்து அவர்கள் 15 நிமிடத்தில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்கள் அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது,திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினோம். அவர் எங்களை அடையாளம் கண்டு கொண்டார், விரைவில் அவர் குணமடைவார்,எனவும் அரசியல் மாண்பு கருதி கருணாநிதியை சந்திக்க வந்ததாகவும் கூறினர்.