தெலுங்கானாவில் விஜயசாந்திக்கு முக்கியமான பதவியைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். தேர்தல் பிரச்சார தலைமைப் பொறுப்பு வி.சாந்திக்குத்தான்! தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிரமித்துப் போய் இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திரசேகரராவின் சொந்தஊர் இருக்கிற மேடக் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் விஜயசாந்திக்குத் தான் என்கிறார்கள்,
விஜயசாந்திக்கு தெலுங்கானாவில் நல்ல செல்வாக்கு இருக்கக்கூடும். தமிழகத்திலும் குஷ்பூவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. சிறந்த நட்சத்திரப் பேச்சாளராகவும் இருக்கிறார். சின்னத்திரையிலும் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார். இவருக்கு காங்கிரஸ் தலைமை முக்கிய பொறுப்புக் கொடுக்குமா என்பது தெரியவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதை தடுக்காமல் இருப்பாரா? கோஷ்டி அரசியல் நடத்தியே நலிந்து கிடக்கும் காங்கிரசில் ஒற்றுமை என்பது கோவைக்காய் இனித்தால் மட்டுமே கைகூடும். தனித்து நிற்கும் அளவுக்கு காங்கிரசை தமிழகத்தில் யாரும் வளர்க்கவில்லை . பெருந்தலைவர் காமராஜருடன் கட்சியின் வளர்ச்சி நின்று விட்டது என்றே கூறலாம்.
இவை தொடர்பாக படப்பிடிப்பில் இருந்த குஷ்பூவிடம் கேட்டோம்.
“தெலுங்கானாவில் விஜயசாந்திக்கு காங்கிரசில் முக்கிய பதவி கிடைத்திருக்கிறது. தலைமைப் பிரச்சாரப் பொறுப்பு அவருக்குத்தான்” என்று சொன்னதுமே இடை மறித்தார் குஷ்பூ ” மன்னிக்கனும். விஜயசாந்தி அரசியலில் சீனியர். தெலுங்கானாவில் அவருக்கு சிறந்த செல்வாக்கு இருக்கிறது.தேர்தல் பற்றி நன்கு அறிந்தவர்.ஆனால் நான் காங்கிரசுக்கு வந்து நான்கு வருசம்தான் ஆகிறது. உங்களின் கேள்வி எனக்கு புரிகிறது. காங்கிரசில் தற்போது மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. வலிமையுள்ள கட்சி என்பது தெரிய வரும்” என்றார்.
“வளர்ச்சிக்கு காங்கிரசில் உள்ள கோஷ்டிகள்தான் காரணம் மேடம்?”
“அதிமுகவைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். நாங்கள் ஜனநாயக அமைப்பு என்பதால் நாங்கள் கருத்துகளை சொன்னால் கூட அதற்கு ஒரு காரணம் சொல்கிறீர்கள். காங்கிரஸ் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது.அதன் வலிமை தேர்தலில் தெரியும்.” என்றார்.