
திரைக்கதை: சண்முகபாரதி,விவேக் இளங்கோவன், ஒளிப்பதிவு :ஜெரால்டு பீட்டர், இசை: ராம்கோபால் கிருஷ்ணராஜ், பாடல்கள்: மதன் கார்க்கி, இயக்கம் :விவேக் இளங்கோவன். நடிகர்கள் :விவேக்,சார்லி,பூஜா தேவ்ரியா,ஹென்டர்சன்,
**********************************
“மூணு வருசமா மகனை பார்க்காம இருக்கலாமா போங்க சார் சியாட்டிலுக்கு”என்று ரிட்டையர்ட் போலீஸ் அதிகாரி விவேக்கை அனுப்பி வைக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. விவேக் பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணாமல் அமெரிக்கப் பெண்ணை கல்யாணம் செய்துகொண்டானே என்று மகனை பார்க்காமலேயே இருந்தவர் மகனையும் மருமகளையும் பார்க்கிறார்.அதன் பிறகுதான் அவர்களுக்கு தெரிந்தவர்கள் விவேக்கின் மகன் உள்பட சிலர் காணாமல் போகிறார்கள்.
என்னாச்சு? விவேக்கின் போலீஸ் மூளை குடைகிறது. சியாட்டிலுக்கு மகனை பார்க்க வந்த சார்லியின் துணையுடன் துப்பறிகிறார். தமிழகப் போலீசின் திறமையை வெளிநாட்டில் வைத்து மட்டம் தட்ட முடியுமா? துப்பறியும் சிங்கம் சங்கர்லாலின் மூளை விவேக்கிற்கு.! கண்டு பிடிக்கிறார் கொலையாளி யார் என்பதை!
முதலில் படத்தை தயாரித்த சியாட்டில் தமிழர்களுக்கு வாழ்த்துகளை சொல்லிக்கொள்வோம். தமிழகத்தின் கமர்ஷியல் மசாலாவை கலந்து விடாமல் சியாட்டிலையும் மறக்காமல் படம் எடுத்திருப்பதற்கு நன்றி. உலக அளவில் வளர்ந்திருக்கும் சிறுமிகள் பாலியல் வன்முறையை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன்.
விவேக் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டிருக்கிற படம். யாருமற்ற அந்த வீட்டில் தனிமையாக கதறி அழும் காட்சியை தமிழகத்தில் உள்ள இயக்குநர்கள் படமாக்க பயப்படுவார்கள்.ஆனால் அந்த காமடியனுக்குள்ளும் ரங்காராவ்,எஸ்.வி சுப்பையா போன்றவர்கள் வாழ்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி இருப்பவர்கள் சியாட்டில் தமிழர்கள்.
மகன் காணாமல் போய்விட்டான் ,இருக்கிறானா,இறந்து இருப்பானா என தெரியாமல் தவிக்கிற தகப்பனை கண் முன் நிறுத்துகிறார் விவேக். குற்றவாளி யார் என்பதை அவர் சிறுகதையாக விவரிப்பது புதிய உத்திதான்! குற்றவாளி அந்த வீட்டுக்குள்ளேயே இருந்தது தெரியாமல் அத்தனை நாள் வாழ்ந்திருப்பதை இயக்குநர் சரியாக கொண்டு போயிருக்கிறார். ‘டான்டிலியன் ‘எனப்படும் வெள்ளைப் பூக்களின் குணம்தான் சஸ்பென்சை அவிழ்க்கிறது.
சார்லிக்கு கிடைத்த வாய்ப்புக்கு அவரால் எவ்வளவு நியாயப்படுத்த முடியுமோ செய்திருக்கிறார். வெள்ளைக்கார மருமகளாக ஹென்டர்சன் .அவர்தான் இந்த கதையின் முக்கியப்புள்ளி.படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெரால்டு பீட்டரின் கேமரா சியாட்டிலின் அழகையும் அணு உலையின் பிரமாண்டத்தையும் காட்டி இருக்கிறது. சுற்றுலா போன அனுபவம்.
படத்தின் பெரும்பகுதியை விவேக்-சார்லி இருவருமே ஆக்கிரமத்திருக்கிறார்கள் என்கிற உணர்வு வராமல் இல்லை.
சினிமா முரசத்தின் மார்க்ஸ்
![]()












