“இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல் யாருண்டு என்று ஊர் பேச வேண்டும் “என்பது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கருத்து .அவருக்கும் பொருந்தக்கூடிய சிறந்த கருத்து.
இது பேரறிஞர் அண்ணா ,தந்தை பெரியார் ,கலைஞர் கருணாநிதி மூவருக்கும் பொருந்தும்.
வெறும் 450 ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு இன்று கோடிக்கணக்கில் சொத்துகள். தொண்டர்கள் வாரி வழங்கிய சொத்துகள் .
அன்று அறிஞர் அண்ணா ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்குவதற்காக திரட்டிய நிதி 450 ரூபா.இதில் பின்வரும் தலைவர்கள் கொடுத்த பணம் அடக்கம்.
அறிஞர் அண்ணா ரூ . 25
பெத்தாம்பாளையம் பழனிச்சாமி ரூ.25 .
டபிள்யூ .தேவராசன் .ரூ.25
நல்ல தீர்ப்பு நமசிவாயம் ரூ 25
பாரி நிலையம் செல்லப்பா .ரூ 10.
இவர்களில் அண்ணா நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் ?
பெரியாரை எதிர்த்து தொடங்கப்பட்ட திமுக பின்னாளில் உடைந்து அதிமுகவாக ஒரு பிரிவினர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தலைமையில் திரண்டனர்.
இன்று இரண்டுமே வலிமையாக இருக்கின்றன. திமுகவை கலைஞர் வலுவான அமைப்பாக விட்டுச்சென்றிருக்கிறார்.
அதிமுக இன்று ஆட்சி அதிகாரத்தினால் வலிமையாக இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் இயங்கத் தொடங்கியவர்கள் பிளவுண்டார்கள். கருத்து வேறுபாடு உடையவர்களை ஆட்சி அதிகாரம் ஒன்றாக உட்கார வைத்திருக்கிறது.
சின்னம்மா என்று சசியின் பாதங்களில் விழுந்தவர்கள்தான் அத்தனை பேரும்.!
சசி விடுதலையான பின்னர் அதிமுகவில் கண்டிப்பாக மாற்றம் நிகழும் என அரசியல்வாதிகள் நம்புகிறார்கள்.
அதற்கான அறிகுறிகளும் தற்போது தெரியவருகிறது.
தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் 1971 -ல் சேலத்தில் நடத்திய மாநாட்டு ஊர்வலத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது போலீசில் புகார்,எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ,கண்டனம் என பல நிகழ்வுகளாக நடக்கிறது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ரஜினியை கண்டித்து பேசினால் மற்றோரு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதரித்து பேசுகிறார்.
“பெரியாரைப் பற்றி ரஜினி தவறாக பேசவில்லை.அவரது கருத்தை ஏற்பவர்கள் ஏற்கட்டும். .அமைதியாக இருக்கவேண்டும் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது.தேவையற்றது. “என்கிறார்.
அடுத்து அவர் சொல்லியிருப்பதைதான் கவனமுடன் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவுடன்சேர்த்து ஜெயில் தண்டனை விதிக்கப்படடவர்களில் உயிர் தோழி சசிகலாவும் ஒருவர். 4 ஆண்டுகால ஜெயில் வாசம் முடிகிற நேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக ராஜேந்திரபாலாஜி பகிரங்கமாக பேசி இருப்பது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியில் வரவேண்டும்.இது என் பிரார்த்தனை. அவர் சிறையில் இருப்பது வேதனை. வெளியில் வந்தால் மகிழ்ச்சிஅடைவேன் ” என்பதாக கூறி இருக்கிறார்.
சசி சிறைக்கு செல்வதற்கு முன்பாக வரிசையில் நின்று வணக்கம் போட்டவர்கள்தான் இன்றைய அமைச்சர்கள் என்பது நினைவில் வைக்க வேண்டிய அரசியல் மாற்றம்.