எழுத்து இயக்கம் :ராஜு முருகன் ,ஒளிப்பதிவு :செல்வகுமார் ,இசை ; சந்தோஷ் நாராயணன் ,பாடல் :யுகபாரதி .
ஜீவா ,நடாஷா சிங் ,லால் ஜோஷ் ,சன்னி வேய்ன் ,சுசிலா ராமன் ,சோனுகுமார் .
*************
காலத்தினால் அழிக்க முடியாத கறை 2002 குஜராத் கலவரம். அந்த கோர தாண்டவத்தை மையமாக வைத்து ஒரு நாடோடியின் கதையை சொல்லியிருக்கிறார் ராஜு முருகன்.
நிலை குத்தி நிற்கிற விழிகள்,கூப்பிய கரங்கள் , ஓலங்கள் ,திக்கற்றவளாக அந்த இசுலாமிய நிறை மாத கர்ப்பிணி ,
அவளின் எதிரில் ஓங்கிய கொடுவாள், எந்த விநாடியும் அவள் மீது இறங்கிவிடும் என்கிற கொதிநிலை வெறியில் அந்த மத வெறியன் இந்த இரண்டும் ,குஜராத் கலவரத்தின் பிரதிபலிப்பு.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து ஒரு காதல் கதை.
பாகிஸ்தான் குண்டு வீச்சினால் அனாதையான ஜிப்ஸி ( ஜீவா )என்கிற பாடகன் தனது ‘சே ‘என்கிற நாட்டியக் குதிரையுடன் நாடு முழுவதும் சுற்றுகிறான். நாகூர் வந்த ஜிப்ஸிக்கு ஆழ்ந்த மதப்பற்றுள்ள இசுலாமிய குடும்பத்துப் பெண் வகீதா ( நடாஷா ) மீது ஈர்ப்பு. அவளுக்கும் அந்த பாடகன் மீது காதல்.
கடுமையான கட்டுப்பாடுகள் உடைத்து பறக்கிற மன நிலையில் உள்ள பெண் அவள் என்பது வீட்டை விட்டு ஜிப்ஸியுடன் ஓடிப் போகிறபோது புரிகிறது. எதிலுமே அழுத்தம் அதிகமானால் அது இப்படித்தான் முடியும் என்பதை வகீதா கேரக்டர் வழியாக சொல்கிறார் ராஜு முருகன்.
மாநிலங்கள் கடந்து நாடோடியாக வாழ்க்கையை கடத்தும் அவர்கள் வழியில் சந்திக்கும் அவலங்கள் ,அநியாயங்கள் எல்லாமே அரசியல் கலந்தவையாக இருக்கின்றன. சுயநலம் உடைத்து ஒருவன் எப்போது சமூகம் சார்ந்து சிந்திக்கிறான் என்பதை ‘சிவப்பு சிந்தனை’யுடன் சொல்லியிருக்கிறார். லால் சலாம் !
இந்த படத்தின் ஆச்சரியம் ஜீவா. இவரால் இப்படியும் நடிக்க முடியுமா என்கிற அளவுக்கு உடல் மொழி பேசுகிறது. நாடோடிக்கான தோற்றம் ,ஒப்பனை எல்லாமே கச்சிதம். ‘காமம் தூண்டும் காதல் காட்சிகள் இல்லை .தன்னை நேசித்து வீட்டை துறந்து வந்தவளை பிரிந்த துயரம், கண்ணெதிரில் தன்னுடைய நாட்டியக்குதிரை ‘சே ‘ தீ வைத்துக் கொளுத்தப்படுகிற கோரம் சகியாமல் குமுறி அழும் காட்சி இப்படி நிறைய சொல்லலாம்.
கட்டுப்பாடான இசுலாமிய குடும்பத்தில் வளர்ந்த பெண் என்பதை நடாஷா எந்த ஒரு காட்சியிலும் மறக்கவில்லை. , நிறைமாத கர்ப்பிணியாக உயிருக்காக மதவெறியனிடம் மன்றாடும் ஒற்றைக்காட்சி..மிகை இல்லாத நடிப்பு.கூப்பிய கரம். ஒலியில்லாமல் கதறலை வெளிக்காட்டுகிற முகம்.தியேட்டர் உறைந்து போகிறது.
கண்ணில் படுகிற முஸ்லீம்களை கண்டபடி வெட்டிச்சாய்த்த சோனுகுமார் “இந்துன்னு சொல்லித்தான் அத்தனையையும் செய்யச்சொன்னாங்க.செஞ்சேன்.ஆனா நான் கோவிலுக்குள் போனது தீட்டுன்னு சொல்லி என் கைகளை வெட்டிட்டாங்க.”என்று முடமாகிப் போன கைகளை காட்டுகிறபோது மதவெறியின் பயங்கரம் புரிகிறது.
மதக்கலவரத்தின் வன்மையை துல்லியமாக பதிவு செய்திருக்கிறது செல்வகுமாரின் கேமரா.
நாடோடியின் கதை என்பதால் ஆங்காங்கே தேக்கம்.திரைக்கதையில் தொய்வு.
மதசார்பற்ற நாட்டில் மதத்தின் பெயரால் நடக்கும் கலவரம் ,அரசியல் பின்னணி இவைகளை பேசுகிற படம் என்பதால் வசனங்களில் காட்டம். போதுமான அளவு இருக்கிறது.ஆனாலும் போதவில்லை என்கிற உறுத்தல் பல காட்சிகளில்.!
இந்த படத்தை பார்க்காமல் வேறு எந்த படத்தை பார்ப்பீர்கள். பாருங்கள் !