அரசியல் கட்சிகளின் பெயரை வைத்துக்கொண்டு படம் பண்ணுவதற்கு ஒரு தில் வேண்டும். அதிலும் முதல்வர் எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில்தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியது என்பதை சொல்வதற்கு உலக மகா துணிச்சல் வேண்டும்.
ஆனால் இயக்குநர் பா.ரஞ்சித் துணிந்து சொன்னார்.எதிர்ப்புகள் வரும் என நினைத்துத்தான் காட்சிகளை வைத்திருந்தார் ,சார்பட்டா பரம்பரையில்!
ஆனால் அவரது வீட்டுக்கு ஆட்டோக்களோ ,கல்வீசுவதற்கு முகமூடி ஆட்களோ செல்லவில்லை.! எதிர்ப்பு என்பது ஏட்டளவில்மட்டுமே இருந்தது. சிலர் மட்டுமே கருத்து சொன்னார்கள்.ஆட்சி பீடத்தில் அமர்ந்து கோடிகளை சம்பாதித்தவர்கள் தேமே என்று இருந்து விட்டார்கள்.
அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமே எம்.ஜி.ஆர் தேவை.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
‘சார்பட்டா படத்தில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன், எனக்கு தெரிந்தவர்கள் என் நண்பர்கள் பலர் பாக்சர்களாக இருந்திருக்கிறார்கள்.
எனக்கு படம் பார்க்கும்பொழுது அந்த காலகட்டத்தை நேரடியாக பார்ப்பதைப்போல இருந்தது,
சார்பட்டா திரைப்படம் மக்களுக்கு நெருக்கமான ஒரு திரைப்படமாக இருக்கிறது, வெற்றிகரமான ஒரு திரைமொழியோடு மக்களை வெகுவாக கவர்ந்து , மக்களிடம் சென்று சேரும் விதமான ஒரு கூட்டு உழைப்பாக அற்புதமான படமாக இருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடித்திருக்கிறார்கள். நான் மிகவும் ரசித்தேன் .
பா.இரஞ்சித் தனது கருத்துக்களை எளிதாக மக்களிடம் கொண்டுசேர்க்க ஒரு திரைமொழியை கையாண்டிருக்கிறார், அது ரசிக்கும்விதமாகவும் , பாராட்டும் விதமாகவும் இருக்கிறது. இயக்குனர் இரஞ்சித் உள்ளிட்ட குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் அன்பும்..”. என்று உலக நாயகன்கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார்.