முரணான கருத்துகளுக்கு சரியான விடைகள் அதே மேடையில் கிடைக்கிறபோது செய்திகள் பிரபலம் அடைகின்றன.
வளர்ந்து வருகிற நடிகர் ஆரி சொன்ன கருத்துக்கு பிரபலமான நடிகர் இயக்குநர் பாக்யராஜ் சொன்ன பதில் கோலிவுட்டின் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது.
பிஜிஎஸ் சரவணகுமார் தயாரிப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இதை தெய்வீக எண்கள் என்று சொல்வார்கள் . டெஸ்லா என்கிற விஞ்ஞானியின் கண்டு பிடிப்பு. சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை வெகு நேரம் நின்றபடியே கேட்டறிந்தவர் டெஸ்லா .
உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
நடிகர் ஆரி பேசியதாவது…
” இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். முதலில் இதை ஓப்பிடுவதே தவறு. கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம், அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்கு தான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்கு தான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது. இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இப்படி பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும்.”என்று தனது கருத்தினை பதிவு செய்தார்.
நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார்.
“இன்றைய திரைப்பட உலகம் வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் 1000 கோடியில் படமெடுக்கிறார்கள், பாக்யராஜ் சிஷ்யன் பார்த்திபன் ஒரு ஷாட்டில் படமெடுத்தார். இங்கே இவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்கள். ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். இவர்களின் தைரியமும் திட்டமிடலும் கவர்கிறது. இயக்குநரின் தெளிவு மிகச்சிறப்பாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது திரைக்கதை தான் பெரிய சிக்கலாக இருக்கிறது. எந்த படத்திலும் திரைக்கதை சரியில்லை என்று தான் முதலில் பேச்சு வருகிறது, திரைக்கதையில் வித்தகரான பாக்யராஜ் இப்போது இருக்கும் திரை ஆர்வலர்களுக்கு ஒரு திரைக்கதை வகுப்பை நடத்த வேண்டுமென இங்கு கேட்டுக்கொள்கிறேன்”என்றார் .
இயக்குநர் நடிகர் பாக்யராஜ் பேசியதாவது…
“21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள். படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ. நான் அவ்வப்போது நடித்துகொண்டு தான் இருக்கிறேன் நான் எப்போதும் ஹீரோ தான்.
நான் இதுவரை கிறிஸ்தவ ‘கெட்டப்’ போட்டதில்லை. இந்தப்படம் தான் முதல் முறை. இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. 81 நிமிடம் தான் எடுப்பார்கள் என்பதால் 3 நாள் ரிகர்சல் செய்தாரகள். யாராவது சொதப்பினால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது .ஆனால் இவர்கள் 1 மாதம் ரிகர்சல் செய்து வந்திருந்தார்கள். மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
ஆரி விமர்சகர்களை பற்றி ஒரு கருத்தைப் பதிவு செய்தார். தயவு செய்து விமர்சகர்களை குறை சொல்லாதீர்கள். நல்லவை இருந்தால் எடுத்துகே கொள்ளுங்கள் .குறைகளை சொன்னால் திருத்திக்கொள்ளுங்கள். படம் நல்லா இல்லை என்றால் ரசிகன் ஸீட்டை கிழித்துப்போடுகிறான். அவனை என்ன செய்ய முடியும். நமது குறைகளை திருத்திக் கொள்ளாமல் விமர்சகர்களை குறை சொல்லாதீர்கள் ” என்றவர் பல சுவையான சம்பவங்களை அவரது பாணியில் சொன்னார்.
இயக்குநர் சிவ மாதவ் பிரபல திமுக பிரமுகரும் ,திரைப்படத் தயாரிப்பாளருமான ராம.அரங்கண்ணலின் பேரன் ஆவார்.
இவர் பேசியதாவது:
“சினிமாவுக்கு வரவேண்டும் என முடிவெடுத்த போது, சினிமாவில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்தேன். ஏனெனில் இங்கு இருப்பவர்கள் எல்லாம் ஜாம்பாவான்கள். அவர்களை மிஞ்ச முடியாது. ஆனால் அவர்கள் செய்யாத விசயத்தை முயற்சி செய்யலாம் என நினைத்தேன். அதே போல் சிந்தனையில் தயாரிப்பாளர் சரவணன் இருந்ததால் அவருடன் பயணிக்க முடிந்தது. நான் தனித்துவமாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். எனக்கு சினிமாவில் உருவம் கொடுத்து உயிர் தந்தவர் பாக்யராஜ் சார். அவரிடம் முழு கதையையும் விவாதித்தேன். அவர் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் நடித்து கொடுத்துவிட்டார். என் தம்பி தான் ஒளிப்பதிவாளர் அவனிடம் முதலில் இந்த ஐடியாவை சொல்லி செய்ய முடியுமா? என்று கேட்டேன், முடியும் என்றான், அதனால் தான் இந்தப்படம் நடந்தது. என்னை புரிந்து கொண்டு என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. நான் உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன், படம் பார்க்கும் போது உங்களுக்கு அது தெரியும். 369 படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.”என்று பேசினார்.