அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தினை, ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் ‘ஆகிய நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான் – மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சசிகுமார் – சிம்ரன் தம்பதியினர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன் என்ற தங்களது இரண்டு மகன்களுடன், இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு படகு மூலம் சட்ட விரோதமாக வருகின்றனர். அப்போது தமிழக காவல் துறையினரிடம் மாட்டிக்கொள்கின்றனர். அப்போது, சசிகுமார் – சிம்ரன் தம்பதியினரின் இளைய மகன் கமலேஷ் ஜெகனின், வேடிக்கையான, துடுக்குத்தனமான பேச்சினால், ஹெட் கான்ஸ்டபிள் ரமேஷ் திலக் அவர்களை கண்டும் காணாதது போல் விட்டுவிடுகிறார். இவர்களின் உறவினரான யோகிபாபுவின் உதவியோடு சென்னையில் குடியேறுகின்றனர். சசிகுமாருக்கு டிரைவர் வேலை கிடைக்கின்றது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது. போலீஸார் சசிகுமார் குடும்பத்தை தேடுகின்றனர். இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை மேடை நாடகத்தின் வடிவில் சொல்லும் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ் தான், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.
பொதுவாகவே, திரைப்படங்கள் ஓரளவிற்காகவாவது நம்பும்படி இருந்தால் தான் அந்தத் திரைப்படத்தை மக்கள் ரசிப்பர். இந்தத் திரைப்படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் இல்லாததால் ரசிக்க முடியவில்லை. அகதிகளின் துயரங்களையும், பரிதாபத்தையும் கொண்டு, அது போரடிக்காமல் இருப்பதற்கு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட காட்சிகளால், உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம், பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. ரமேஷ் திலக் மூலமாக காவலர்களின் கடமையினை எப்படி எடுத்துக்கொள்வது? என பல கேள்விகள். மொத்தத்தில், தமிழனாக இருந்தால் லைக் பண்ணு! என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ள படம்.
சசிகுமார், தனது வழக்கமான ஸ்டைலில் வந்து போகிறார். ஈர்க்கும்படியான காட்சிகள் இல்லை. இவருக்கு மனைவியாக சிம்ரன்! பொருத்தமில்லாத ஜோடி! ஒரே ஆறுதல், இவர்களுக்கு மகனாக நடித்திருக்கும், கமலேஷ் ஜெகன் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், ஸ்ரீஜா ரவி, பக்ஸ், யோகிபாபு போன்றோரும் நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம்! அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு, அப்பட்டமான மேடை நாடகப் பதிவு! எழுதி இயக்கியிருக்கும் அபிஷன் ஜீவிந், இலங்கைத் தமிழர்களின் அவல நிலையை எடுத்துச் சொல்ல முயற்சித்திருக்கிறார்.