
மஹேந்திரன், நீமா ரே, நிழல்கள் ரவி, சிக்கல் ராஜேஷ், சிசர் மனோகர், சேரன் ராஜ், அன்சி சிந்து, அஷ்மிதா, கும்தாஜ், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இரவின் விழிகள். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிக்கல் ராஜேஷ், எழுதி இயக்கியிருக்கிறார். P. மஹேந்திரன் தயாரித்து நடித்திருக்கிறார்.
பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்துள்ளார், ஏ.எம்.அசார்.
மஹேந்திரனும், நீமா ரேயும் காதலர்கள். அவர்கள், ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். பார்வையாளர்களை கவர எல்லா வரம்புகளையும் மீறி வீடியோ பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், காட்டிற்குள் பயணம் செய்யும் அவர்களை, முகமூடி அணிந்த மர்ம மனிதன் கடத்தி, சித்ரவதை செய்கிறான். சித்ரவதைக்குள்ளாகும் அவர்களின் கதறல் சத்தம், அந்த வழியாக ரோந்துக்கு வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜுக்கு கேட்கிறது. அதனால், அந்த சத்தம் வரும் திசையை நோக்கி, போலீஸ் கான்ஸ்டபிள் சிசர் மனோகருடன், சேரன் ராஜ் செல்கிறார். அவர்களும் அந்த கொலைகாரனிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதன்பிறகு, என்ன நடந்தது? என்பது தான், ‘இரவின் விழிகள்’ படத்தின் கதை.

அலைக்கற்றைகள் ஊடுருவாத கிராமங்களே இல்லை. என்று தான் சொல்ல வேண்டும். அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் செலவழிப்பதை விட, இன்டர்நெட் ரீசார்ஜ் செய்ய பணம் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் தங்களுடைய திறமையினை வெளிப்படுத்துவதாக நினைத்து, பலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையினில் பதிவிட்டு வரும் வலைதள வாசிகள், அடுத்தவர்களது வாழ்க்கையினை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை எவ்வாறு சீர்குலைக்கின்றன. என்பதை சொல்ல நினைத்ததை, அழுத்தமாக சொல்லாமல் விட்டிருக்கிறார், இயக்குநர் சிக்கல் ராஜேஷ்.
படத்தின் அநேக காட்சிகள் காட்டுக்குள், இருண்ட பகுதிக்குள் நடக்கிறது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே திகில் தெரிகிறது. மற்றக்காட்சிகளில் இல்லை. படமாக்கலில் பெரும் பின்னடைவு. மஹேந்திரன், நீமா ரே பாடல் காட்சியும், அஷ்மிதாவின் கவர்ச்சிப் பாடல் காட்சியும் பரவாயில்லை. மற்ற காட்சிகளில் ஒளிப்பதிவு, இசையமைப்பு என எல்லாமே சுமார் தான். காட்சிப்பதிவில், போதிய பயிற்சியின்மை அப்பட்டமாக தெரிகிறது. நடிகர் நடிகைகளிடம் நடிப்பைக் கொண்டு வருவதில் சிரமப்பட்டிருப்பது நன்கு தெரிகிறது.
வரம்பை மீறும் யூடியூபர்களை தண்டிக்க நினைத்தது, சரி தான். அதற்காக இயக்குநரை பாராட்டலாம். ஆனால், ரசிகர்களை தண்டித்தது நியாயமில்லை!












