
‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ . இத்திரைப்படத்தை, ‘திருமலை புரொடக்ஷன்’ சார்பில், கே. கருப்புசாமி தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பு, அமராவதி. கதையின் நாயகன் நல்லபாடனாக ‘பரோட்டா’ முருகேசன் நடித்திருக்க, அவருடன் கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவை ஜெ.டி. விமல் கவனிக்க, ‘மூடர்கூடம்’ நடராஜன் சங்கரன் (NTR) இசையமைத்துள்ளார். கலையை J K ஆண்டனியும் சண்டைப்பயிற்சியை ‘மாஸ்’ மோகனும், படத்தொகுப்பை சதிஷ் குரோசோவாவும் கையாண்டுள்ளனர். சுகவனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
கொங்கு மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயக் கூலியின் வாழ்வியல், சவால்களாகவும், சுரண்டல்களாகவும் நிறைந்திருக்கிறது. அதை அவர், எவ்வாறு எதிர்கொள்கிறார். என்பது தான், ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
சிறு வயதில் விளையாடிக்கொண்டிருக்கும் ‘பரோட்டா’ முருகேசனின் மகன் விஜயன், கிணற்றில் விழுந்து விடுகிறார். மூர்ச்சையற்ற நிலையில், கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட தனது மகனை காப்பாற்றும்படி, அவரது குல தெய்வமான ஒண்டிமுனியை நோக்கி, ஆட்டுக் கிடாயை பலி கொடுப்பதாக வேண்டுகிறார். மகனும் கண்திறக்கிறார்.
பலி கொடுப்பதாக நேர்ந்துவிட்ட ஆட்டுக்குட்டி வளர்ந்த நிலையில், ஒண்டிமுனி இருக்கும் கோயில் நிலப்பரப்பு, இரண்டு பங்காளிகளுக்கு இடையே நிலவும் பிரச்சனையினால் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால், நல்லபாடன் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், ‘பரோட்டா’ முருகேசனின் மகன் விஜயன் தியா, அந்த ஆட்டுக்கிடாயை விற்று பைக் வாங்குகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ஒண்டிமுனியும் நல்லபாடனும்’.
நல்லபாடன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார், பரோட்டா முருகேசன். தன்னை ஏமாற்றி வேலை வாங்கும் பண்ணையார்களிடம், வேறு வழியில்லாமல் அவர் காட்டும் அடிமைத்தனம், வரதட்சனை கேட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட மகளின் நிலை கண்டு வருந்துவது, ஆட்டை விற்ற மகனை நினைத்து குமுறுவது, பேரனிடம் அன்பு காட்டுவது, ஆட்டுக்கிடாயை ஆரத்தழுவுவது என அனைத்து காட்சிகளிலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
பங்காளிகளாக நடித்திருக்கும் கார்த்திகேசன், முருகன் இருவரும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். பரோட்டா முருகேசனின் மகனாக நடித்திருக்கும் விஜயன், சேனாபதி, சித்ரா, கெளசிகா, தமிழினியன் விகடன், பேரனாக நடித்திருக்கும் சிறுவன் போன்றோரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.டி. விமல் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் ஓகே! எழுதி இயக்கியிருக்கும் சுகவனம், உழைப்புச் சுரண்டல் , சாதியக் காதல், அதிகார மோதல், கடவுள் நம்பிக்கை என அனைத்தையும் ஒரே படத்தில் கூற முயற்சித்திருப்பதுடன், அவை முழுமையற்று இருப்பது, படத்தின் பலவீனம்.
‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – கொங்கு ஏரியாவிற்கு மட்டும்!












