
பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், ஜரினா வஹாப், போமன் இரானி, சத்யா, பிரபாஸ் சீனு, சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளி வந்துள்ள திரைப்படம், தி ராஜாசாப். எழுதி இயக்கியிருக்கிறார், மாருதி. ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ சார்பில், டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இசை, தமன். ஒளிப்பதிவு, கார்த்திக் பழனி.
ராஜூ (பிரபாஸ்), தன்னுடைய பாட்டி கங்கம்மாவுடன் (ஜரினா வஹாப்) வசித்து வருகிறார். இறந்து போன கங்கம்மாவின் கணவர் கனகராஜ் (சஞ்சய் தத்), கங்கம்மாவின் கணவில் வந்து தான் சாகவில்லை. என கூறுகிறார். இதனால், தனது பேரனிடம் அவரை கண்டுபிடிக்க நிர்பந்திக்கிறார். அவரும் தாத்தாவை கண்டுபிடிக்க கிளம்புகிறார். அந்த சமயத்தில் பெஸ்ஸியை (நிதி அகர்வால்) சந்திக்கிறார். சந்தித்த பொழுதிலேயே காதல் வயப்படுகிறார். காதலித்துக்கொண்டே தாத்தாவை தேடுகிறார்.
அதன் தொடர்ச்சியாக ராஜூ (பிரபாஸ்), பைரவியை (மாளவிகா மோகனன்) சந்திக்க நேர்கிறது. பைரவியின் தாத்தா (சமுத்திரக்கனி) கங்காராஜுவின் உதவியோடு, தாத்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார். தாத்தாவை கண்டுபிடித்த பிறகுதான் அவர், ஆவியாக அலைந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், தி ராஜாசாப்.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் பிரம்மாண்டமான வகையில், வழக்கமான காமெடிப் பேய்க்கதையை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பயமும் வரவில்லை. சிரிப்பும் வரவில்லை. கிளாமருக்கு , மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என மூன்று கதாநாயகிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அது ஓரளவுக்கு ஓகே ஆகியிருக்கிறது.
பிரபாஸ், ராஜூ என்ற கலகலப்பூட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய ஆளுமையால் கொஞ்சம் ரசிக்க முடிகிறது. கதாநாயகிகளுடன் ஆடிப்பாடியிருக்கிறார். பாடல் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது இதன் மூலம் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தியிருக்கிறார்.
சஞ்சய் தத், கனகராஜு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரிதாக ஈர்க்கவில்லை.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகிய மூவருமே வண்ணமயமான உடையலங்காரத்தோடு, படம் முழுவதும் தோன்றி, தங்களது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார்கள். பாடல் காட்சிகளில் கூடுதல் கவனம் பெறுகிறார்கள்.
பழம்பெரும் இந்தி நடிகை ஜரினா வஹாப், பிரபாஸின் பாட்டியாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுவிடுகிறார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
போமன் இரானி, சத்யா, பிரபாஸ் சீனு, சமுத்திரக்கனி, ரங்கஸ்தலம் மகேஷ், சப்தகிரி, விடிவி கணேஷ் உள்ளிட்டவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு, பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கிறது.
தொழில்நுட்பம் பலமாக இருந்தாலும், மெதுவாக செல்லும் திரைக்கதை, அதன் குழப்பமும் படத்தை ரசிக்கத்தடையாக இருக்கிறது. முதல் காட்சியே மிரட்டலுடன் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு எதுவுமே இல்லை.
இயக்குநர் மாருதி, திரைக்கதையில் போதிய கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
‘தி ராஜாசாப்’ – பேஜார் சாப்!












