திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையை எப்படியாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற தீராத லட்சியத்துடன் அலைகிறார் நாயகன் ராகவ். இந்தத் தேடலின் போது அவருக்கு யாமினி லக்ஷ்மணன் என்ற பாலியல் தொழிலாளியின் அறிமுகமும் நெருக்கமான நட்பும் கிடைக்கிறது. ராகவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற யாமினி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் வேளையில், எதிர்பாராத திருப்பமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து யாமினி மர்மமான முறையில் மரணமடைகிறார். காவல் துறை இதனை வழக்கமான ஒரு விபத்தாகக் கருதி வழக்கை நகர்த்தினாலும், ராகவ் இதில் ஒரு திட்டமிட்ட படுகொலை ஒளிந்திருப்பதாகச் சந்தேகிக்கிறார்.
ராகவ், காவல்துறையை நம்பாமல், தனது தோழியின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் மர்ம மரணத்திற்கு விடை தேடிச்செல்கிறார். அவரது அதிரடிப் புலனாய்வில் பல மர்மங்கள் வெளிவருகிறது. குற்றவாளியை நெருங்கினாலும் அதற்கான ஆதரங்கள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மீண்டும் போலீஸ் உதவியை நாடுகிறார். அதற்கு பின் என்ன நடந்த்து என்பதே பீப்.

கதையின் நாயகனாக வரும் ராகவ், கூர்மையான புலனாய்வுத் திறன் கொண்ட சாமான்ய இளைஞனின் பாத்திர அமைப்பிற்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தி, ஒரு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காவல் துறையினரையே வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் ரகசியப் புலனாய்வு நகர்வுகள் ரசிகர்களுக்கு நல்ல சஸ்பென்ஸ் சுவாரசியத்தைத் தருகின்றன. இவருக்கு இணையாகப் பாலியல் தொழிலாளி சுனைனா என்ற சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ள யாமினி லக்ஷ்மணன், தாராளமான கவர்ச்சியால் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்ப்பதுடன், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் தனது முதிர்ச்சியான நடிப்புத் திறனை வெளிப்படுத்தித் தனது பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்துள்ளார். இவர்களுடன் பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தரம், திரையுலக நடிகையாக வரும் ஐடி ஆச்சார்யா, மற்றும் நண்பர்களாகத் தோன்றும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் பொருத்தமான நடிப்பினை வெளிபடுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார், இரவுக் காட்சிகளையும் மர்மப் பின்னணிகளையும் தனது கேமரா கோணங்களின் மூலம் நேர்த்தியாகக் கடத்தியுள்ளார். பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசையும் ஓகே தான்.
திரைக்கதையின் போக்கில் உண்மையான குற்றவாளி யார் என்ற ரகசியம் பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே உடைக்கப்பட்ட பிறகும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து நடமாடும் அந்தச் குற்றவாளியை ஆதாரங்களுடன் நாயகன் எப்படி பிடிக்கிறார் என்ற அடுத்தடுத்த நகர்வுகள் திரைக்கதையில் நல்ல சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், தேவையற்ற திணிப்புகளால் சில இடங்களில் போரடிக்கிறது.
பீப் – பரவாயில்லை!












