சமூகத்திற்குத் தேவையான மிக முக்கியமான ஒரு விழிப்புணர்வையும், மதுவினால் மனித வாழ்விலும் குடும்பங்களிலும் ஏற்படும் சீரழிவுகளையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் நோக்கில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘நல்ல படம்’.
டாஸ்மாக் பார் நடத்தி வரும் படத்தின் நாயகன் ஹரிஷ், அந்தப் பாரைத் திறப்பதற்கு முன்பாகவே மது அருந்தும் அளவிற்குத் தீராத குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போனவர். எந்த நேரமும் போதையின் உச்சியிலேயே மிதந்து கொண்டிருக்கும் இவரை, மருத்துவம் பயிலும் நாயகி தனலட்சுமி காதலித்து வருகிறார்.
ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் என ஒரு பெரும் கூட்டமே இந்த மதுப் பழக்கத்தினால் தங்களின் துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால், தங்களின் நிலையைப் பற்றியோ அல்லது தங்களைச் சுற்றியுள்ளவர்களின் கண்ணீரைப் பற்றியோ கவலைப்படாமல், குடிப்பதை தங்களின் முதன்மை நோக்கமாகக் கொண்டு குடித்து வருகிறார்கள். இவர்களை இந்த பழக்கத்திலிருந்து மீட்க குடும்பத்தினர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், எதிர்பாராத திருப்பமாக இந்தியா முழுவதும் முழுமையான மதுவிலக்கு திடீரென அமல்படுத்தப்படுகிறது. மதுப் பிரியர்களும், அதற்கு முற்றிலும் அடிமையானவர்களும் குடிக்க மது கிடைக்காமல் தவித்துத் திண்டாடுகிறார்கள். மதுவின் மீதான வெறியால் அவர்களில் சிலர் சட்டவிரோதமாகத் தாங்களாகவே கள்ளச்சாராயத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. வேறு வழியின்றி, காலப்போக்கில் அவர்கள் படிப்படியாக அந்த மதுப் பழக்கத்தை மறந்துவிட்டு ஒரு புதிய எதார்த்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள்.
மதுவின் பிடியில் இருந்து விடுபட்டதால், வறுமை நீங்கி ஒவ்வொரு குடும்பமும் நிம்மதிப் பெருமூச்சு விடும் இத்தருணத்தில், அரசாங்கம் மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிடுகிறது. மதுப்பழக்கத்தை முழுமையாக மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நாயகனும் அவனது நண்பர்களும் இந்தச் சூழலில் என்ன முடிவெடுத்தார்கள், மீண்டும் அந்தப் போதைக்கு அடிமையானார்களா, இல்லையா? என்பதை சொல்வது தான் இப்படத்தின் மீதிக்கதை.
மதுவின் கொடிய தீமைகளை மக்களுக்கு எளிய முறையில் எடுத்துச்சொல்லும் ஒரு நல்ல முயற்சியாக இப்படம் கவனம் ஈர்க்கிறது.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் டாக்டர் ஏ. ஹரிஷ், ஒரு குடிகாரனுக்கே உரிய உடல்மொழியையும் எதார்த்தத்தையும் தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக வரும் தனலட்சுமி, ஒரு மருத்துவ மாணவிக்குரிய முதிர்ச்சியையும், காதலனைத் திருத்தப் போராடும் பெண்ணின் உணர்வுகளையும் பதிவு செய்துள்ளார்.
இவர்களுடன் கல்கி, மொட்டா ராஜேந்திரன், ரமா மற்றும் பிரியதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திரைக்கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
சமூக விழிப்புணர்வுக்கான இந்த ‘நல்ல படம்’ எடுத்த இயக்குநர் பிரபுராம் சி.யை பாராட்டலாம்!












