நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசியது :-
தடையை உடைத்து அடுத்தகட்ட வேலையை நோக்கி நகர இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தடை வாங்க வேண்டும் என்று போராடியவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருக்கும். இந்த நிலத்தில் எந்த சர்ச்சையும் இப்போது இல்லை. நடிகர் சங்க கட்டிடத்தின் அடித்தளப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தகட்ட பணிகள் நாளை முதல் தொடங்கும். நடிகர் சங்க கட்டட பணிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து பிரமாண்ட விழாவோடு திறப்பு விழா நடக்கும். எந்த தவறுகளும் நடிகர் சங்க கட்டட பணிகளில் நடக்காது. எங்கள் கை சுத்தமானது. ஒரு நடிகர் தன்னுடைய கருத்தை கூறுவதில் எந்த தவறும் இல்லை. கமல் ஹாசன் அவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் , ஒரு நடிகனாக அவருக்கு பின் இந்த விஷால் நிற்பான். கமல் அவர்கள் அரசுக்கு எதிராக பேசுவதால் கேளிக்கை வரி பிரச்னை முடிவடையாமல் இருக்கிறது எனும் தகவல்களில் உண்மையில்லை. GST சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. 120 க்கு மேல் உள்ள டிக்கெட் கட்டணத்திற்கு 28% ஜி எஸ் டி விதிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மத்திய அரசுக்கு வைத்திருக்கிறோம். தற்போது 100க்கு மேல் 28% வரி பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கும்போது, திருட்டுதனமாக படங்களை வெளியிடும் தளங்களை நிச்சயம் தடுக்க முடியும். நமது மத்திய அரசு நினைத்தால் ஒரே வருடம் அல்லது ஆறு மாதத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடுவதை தடுக்க முடியும். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும் என்றார் விஷால்.
.