சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிகழ்வு தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது,
என் இனிய தமிழ்மக்களே , தமிழ் மொழியும் தமிழ் இனமும் எங்கே நிற்கிறது? எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலில் ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான், கேரளம், கேராளாவாக இருக்கிறது. கர்நாடகம் ,கர்நாடாகாவாக இருக்கிறது .ஆனால் தமிழகம் மட்டும் தான் இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் மட்டும் தான் எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்கு தடை,எழுதும் எழுத்துக்கு தடை, பேசுகின்ற பேச்சுக்கு தடை, வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை . என தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாய் வாழும் ஒரு அவலம் இன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது . ஆண்டாளை பற்றி பேசிய கவிஞர் வைரமுத்துவை, அநாகரீகமாக பேசிய மத வாதிகளே கொஞ்சம் யோசியுங்கள், இன்று தமிழுக்கே தலை குனிவு ஏற்பட்டிருக்கிறது. குரல் கொடுப்பீர்களா? தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன்.அந்த செம்மொழியை, மொழிகளில் மூத்த தமிழ் மொழியை, ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே, உங்கள் ரத்தம் கொதிக்க வில்லையா ? வாழ்வது தமிழ் மண், சுவாசிப்பது தமிழ்க்காற்று ,சாப்பிடுவது தமிழ்ச் சோறு . ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேன், தேசிய கீதத்துக்கு மட்டும் தான் மரியாதை செய்வேன் என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா ? அறிவார்ந்த தமிழ்க்கூட்டமே ,நம் முதுகின் மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம்.நீ விழிக்க வில்லை என்றால் உன் உயிரையையும், மொழியையும் அழித்து ,இனத்தையும் அழித்து வாழும் இன்னொரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு . எந்த தமிழனாவது புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்லுகிறாய் , தமிழில் சொல் என போராடியிருக்கிறானா கோயில்களில் , இல்லை சம்ஸ்கிருத மொழியை அவமான படுத்தியிருக்கிறானா? இல்லை. நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். மதிக்கிறோம் ஆனால், நீங்கள் தான் எங்கள் பூமியில் வந்து வாழ்ந்து கொண்டு, எங்களை புறக்கணீக்கிறீர்கள் . நாங்கள் சமஸ்கிருதத்தை படித்ததுமில்லை, பழித்ததுமில்லை ! நீங்கள் தான் நாங்கள் போட்ட சோத்தை தின்று விட்டு ,எங்கள் தமிழை, நீச பாஷை என்று கூறுகிறீர்கள் .
வர்ணாஷிரமம் ,மனுதர்மம் என்று மனிதர்களை பிரித்த இந்து மத வாதிகளே, இன்று தமிழ் நாட்டில் தமிழையே தவிர்க்கின்றீர்களா? நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, அது தான் எங்கள் உயிர்மூச்சு! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு ஆளுநர் எழுந்து நிற்கிறார். நீ எழ மாட்டியா? தமிழ் நீச பாஷை .சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரீகம் கூட மறந்தது ஏன்? தள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும் பொது எழுந்து நின்ற வரலாறு தமிழ் நாட்டிலே உண்டு. தெரியுமா ? தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையை பெற்றுக்கொண்டு தமிழை அவமதிக்கும் இது போன்ற மடாதிபதிகளை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து உணர்ந்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது.பூட்டிய இரும்புகூட்டின் கதவு திறக்கப்பட்டு விட்டதுசிறுத்தையே வெளியே வா, எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கி புலியென செயல் செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதி தாசன் பாடலை போல் தான், தமிழா ஓன்று சேர்! தமிழா! தமிழால் ஓன்று படு ! நீறு பூத்த தமிழ் சமுதாயத்தை கேட்டு கொள்ளுகிறேன் , ஓன்று சேர். ஒற்றுமைபடு ! தமிழால், இனத்தால் ஓன்று சேர். தமிழ் வாழ்க ! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.