ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர்.
விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஸ்டன்ட் யூனியனுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.
இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது,’ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள்’ என்று அறிவுரை கூறினார்.கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சிகிச்சையை உறுப்பினர்கள் அனைவருக்கும் அளித்தார்.விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி, ரத்ததானம் வழங்கி பேசும்போது, “ படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்து கொண்டு இருகிறீர்கள், உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறேன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள் “என்று பேசினார். விழாவில் ஸ்டன்ட் யூனியனின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கவுரவிக்கப் பட்டனர். யூனியனின் செயல்பாடுகளுக்காக WWW.SISDSAU.COM என்ற இணைய தளமும் துவங்கப்பட்டது.
விழாவில் ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர் வரவேற்புரையாற்றினார் சூப்பர் சுப்பராயன் நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் எம்.செல்வம் பொருளாளர் சி.பி.ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.