
ஈழத்து உறவுகள் என்றாலே உள்நாக்கும் கசக்கிறது அரசுகளுக்கு! தமிழகத்தில் சொந்தங்கள் இருப்பதால் உரிமையுடன் ஏதிலிகளாக வந்தவர்கள் .அவர்களுக்கு ஆட்சியாளர்கள்,அரசியல் கட்சிகள் பெரிதாக உதவிகள் செய்வதில்லை.
ஆனால் “எனது சொந்தம்’ என உரிமையுடன் களம் இறங்கி இருப்பவர் திவ்யா. அருந்தமிழன் சத்யராஜின் மகள்.
இவர் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்
சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார்.
“சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்தேன். மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டேன்.
இனி ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஊட்டச்சத்து ஆலோசனை மையம் சென்னையில் தொடங்க உள்ளேன். ஊட்டச்சத்து மாத்திரைகள் தொடர்ச்சியாக இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் என்கிற நிலைமை மாற இது தொடக்கமாக இருக்கும் ” என்றார் திவ்யா.