பளபளப்பு இல்லை, பகட்டு இல்லை.ஆனால் கைதூக்கி விட்டால் நாங்களும் நாளைய விஞ்ஞானிகளே என்கிற முனைப்பு இருக்கிறது. பரிசுகள் வாங்கிய எல்லா மாணவ மாணவியருமே அடித்தட்டு மக்கள்.கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். இவர்களில் ஈழத்தமிழர்களின் பிள்ளைகளும் பின்னடைந்த இருளர்களும் அடக்கம்.
இவர்களெல்லாம் யார்?
நடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39 ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மற்றும் விளையாட்டுக் கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவி,மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கபடுத்த தமது 100வது படத்தின்போது , சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கியவர்தான் சிவகுமார்.
விழாவில் 21 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ. 2,05,000 பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்காக ’தாய்த்தமிழ் பள்ளிக்கு’ 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் அறிவியல் துறையில் சிறந்த விளங்கி வரும் மாணவர்களுக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அதில் சில மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் குறிப்பாக கராத்தேவில் மாநில மாவட்ட அளவில் தங்கப் பதக்கம் பெற்ற வேலூர் மாணவி சுவாதி , அரசு பள்ளியில் படித்து, முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் கார்த்தி ஆகியோர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக அறிவியல் துறையில் சிறந்து விளங்கி வரும் அறிவரசனின் வழிகாட்டுதலில் கிசோர் என்ற மாணவர் (Electronic and Robotics) ஈரப் பதத்தை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துஇருக்கிறார்.அந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். கௌதம் என்ற மாணவர் (Sliding Platform) என்ற கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியானது படி ஏற இயலாத ரயில் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இருளர் இன மாணவர் சின்னகண்ணு என்ற மாணவர் மலை பகுதியில் போக்குவரத்துக்கு வசதி இன்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து தேசிய அளவில் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் பெற்றுள்ளார் .இது போன்று சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
எஸ்.ஆர். பிரபு அனைவரையும் வரவேற்றார்.
“
சிவகுமாரின் மகள் திருமதி. பிருந்தா சிவகுமார், இறை வணக்கம் பாடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் அகரம் பவுண்டேஷனின் இந்நாள் மாணவர்கள்.
சிவகுமார் பேசுகையில் தனது பள்ளிப்பருவ அனுபவங்களையும் நினைவு படுத்தினார்.
“இங்கு பரிசு வாங்கிய குழந்தைகள் அனைவருமே நெசவு தொழிலாளி, தையல் தொழிலாளி குடும்பங்கள் என்று சொன்னாங்க. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் பார்த்த வறுமையைவிட, அதிகமாக பார்த்து வந்தவன் நான். சூர்யா அப்பா என்றவுடன் ஹீரோ என நினைத்துவிடாதீர்கள்.
நான் பிறந்தக் காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. உணவு தானியங்கள் விழையாது. கற்றாலை வேர்த்தண்டில் தயாரிக்கப்பட்ட உணவுதான் எங்கள் கிராமத்தில் உணவாக இருந்தது. எங்க வீட்டில் கொஞ்சம் வசதி என்பதால் பாத்திரத்தில் அடிப்பிடித்த சோறு கிடைக்கும். மாடு இருந்ததால் சுத்தமான பால், தயிர் கிடைக்கும்.
அப்போது தங்கம் பவுன் 12 ரூபாய். அக்கா 3ம் வகுப்பு போகணும், அதுக்கு 3 ரூபாய் கொடுக்கணும். நான் 2ம் வகுப்பு போகணும், அதுக்கு 2 ரூபாய் கொடுக்கணும். பவுனில் பாதிவிலை வருகிறதே என்று விதவைத் தாய், எங்க அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பிறகு காலையிலேயே விடிவதற்கு முன்பு பருத்தி எடுக்கப் போகணும். அதை முடித்துவிட்டு பெரியம்மாவின் தோட்டத்துக்குச் சென்று பூக்களை பறித்து மாலையாக கட்டிமுடித்து கொடுத்துவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகணும். செருப்பு என்றால் என்னவென்று தெரியாது. எவ்வளவு தூரம் என்றாலும் நடந்தே தான் போக வேண்டும்.
தீபாவளி, பொங்கல் பண்டிகை எல்லாம் வரும். அப்போது புதுசா துணியெல்லாம் போட மாட்டோம். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க 5 ரூபாய் என்னால் கொடுக்க முடியவில்லை. எங்கம்மாவுடன் பிறந்தவர் தான் மாதம் 85 ரூபாய் அனுப்பி வைத்து சென்னையில் படிக்க வைத்தார். 6 அடிக்கு 5 அடி நான் சென்னையிலிருந்த ரூமின் சைஸ். 7 வருடம் அதில் தான் இருந்தேன்.
நாங்கள் இருந்த ஏரியாவில் நிறைய குடும்பங்கள் இருக்கும். ஆகையால் மாலை 6 மணிக்கு மேல் பாத்ரூம் போகக்கூடாது. காலையில் பெண்கள் எல்லாம் குளித்து முடித்தவுடன் தான் பாத்ரூம் போகணும், சுவரில் ஆணி அடிக்கக் கூடாது, தம் அடிக்கக் கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களோடு தான் என்னைச் சேர்த்தார்கள். நாங்கள் 22 பேர் பேச்சுலராக இருந்தோம். அந்த 22 பேருக்கு 2 டாய்லெட், 2 பாத்ரூம் தான் இருக்கும்.
காலை 4:30 மணிக்கு எழுந்து டாய்லெட் போக ஆரம்பித்தேன். அப்போது சுத்தமாக இருக்குமே என்ற காரணத்தினால் தான். அப்போது தான் 5 மணிக்கெல்லாம் யோகா செய்யத் தொடங்கினேன். 1 ரூபாய் கொடுத்து யோகா சம்பந்தப்பட்ட புத்தகங்கள் வாங்கித் தான், யோகாவே கற்றுக் கொண்டேன். அசைவ சாப்பாட்டை விட்டு 30 வருஷமாகிவிட்டது. ஒரு மாதத்துக்கு திரைப்படம் பார்க்க 3 ரூபாய் பட்ஜெட். இங்கிருந்து மகாபலிபுரத்துக்கு சைக்கிளிலே சென்றுவிட்டு வருவேன்.
இப்போது என் குழந்தைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள். ஒரு வேலை சாப்பிட்டுவிட்டு வந்தால் 15 ஆயிரம் ரூபாயாகிறது.
இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சிவகுமார் நடிகரானவுடன் தான் பணக்காரன். வாழ்க்கையில் எவன் ஒருவனுக்கு தேவைக் குறைவோ, அவனே பெரிய செல்வந்தன். சென்னையில் ஒரு மாதத்தில் 85 ரூபாய் செலவு செய்து தங்கியிருக்கும் போது, இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் இருந்தேன். இப்போது மகன்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், சுண்டுவிரல் சிறிதாக தெரிகிறது. அப்படியென்றால் எவ்வளவு தைரியத்தில் இருந்திருக்கிறேன் பாருங்கள்.
இரண்டு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி, ஒழுக்கம் இரண்டு மட்டுமே உங்களைக் காப்பாற்றும். எந்த ஊர், அப்பா – அம்மா என்ன செய்றாங்க போன்ற எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். கல்வி, ஒழுக்கம் இந்த இரண்டு மட்டும் சரியாக இருந்தால், உலகத்தில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போகலாம்.
ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும் போது, அது பலருக்குமே உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளைத் தொடங்கினேன். என் பசங்க இந்தத் துறைக்கு வருவாங்க, அகரம் பவுண்ட்டேஷன் தொடங்குவாங்க என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. நீ ஒன்றை நேர்மையாக சத்தியமாக செய்தாய்… அது பல மடங்கு பெருகும் என்பதற்கு உதாரணம். என்றார்.
சூர்யா பேசியது:
“கல்வி, ஒழுக்கம் இவ்விரண்டும் சரியாக இருந்தால் வாழ்க்கை தப்பாக போகாது. அப்படி வாழ்ந்து, உணர்ந்து கற்றுக் கொண்ட விஷயத்தைத் தான் எடுத்துச் சொல்றோம். 50 வயசுக்குப் பிறகு இப்படி இருந்திருக்கணுமோ என்று யோசிக்காமல், அப்படி வாழ்ந்தவர்கள் சொல்வதை புரிந்துக் கொள்ள வேண்டும். எதற்காக ஓடணும், பணம் சம்பாதிக்கணும் என்று கேள்விக்கெல்லாம் இந்த விழாவைத் தான் பதிலாக பார்க்கிறேன். சில மாணவர்களுடைய பேச்சைக் கேட்கும் போது தான், நாம் இன்னும் நிறையப் பண்ணனும் என்று ஓட வைக்குது. பல மாணவர்களுடையப் பேச்சு தான் உத்வேகத்தைக் கொடுக்கிறது.
அகரம் இப்படியொரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை. 2500 மாணவர்கள் இந்தாண்டு தொடர்கிறது. 1979-ல் ஒருவருடைய சின்ன எண்ணத்தால், இப்போது தமிழக மக்களின் பலருடைய ஆசிர்வாதம் கிடைக்கிறது. விளையாட்டு மற்றும் அறிவியல் சார்ந்து அடுத்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும் என்பதை அகரம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியில் எங்கோ பின் தங்கிட்டோமோ, கல்வித்தரம் சரியா இல்லையோ என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாத்தையும் தாண்டி நான் படித்தே தீருவேன், ஆகியே தீருவேன் என்ற வைராக்கியமிருந்தால் எதுவுமே தடை கிடையாது. இதுக்கு உதாரணமாக நம்முன் பலர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இலக்கை அடைந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டால் நிச்சயமாக அந்த இலக்கை அடைந்தே தீருவீர்கள்.
நான் இந்த மேடையிலிருக்கும் அளவுக்கு வளர்வேன் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை. 1997-ல் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பாவின் ஆசிர்வாதத்தால் நானும் தமிழ்நாட்டில் நடிகனாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறேன். எனது ஆரம்பம் இடத்தை யோசித்துப் பார்த்தால், எப்படி இந்த இடத்துக்கு வந்தேன் என்று பயமாக இருக்கிறது. பாரதியார் கவிதைகள், நண்பர்களின் ஊக்கம், இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவராலும் மட்டுமே இந்த இடம் கிடைத்திருக்கிறது.
அந்த இடத்தைத் தாண்டி, அகரம் மூலமாக செய்து வரும் உதவிகளை உயர்வாகப் பார்க்கிறேன். நடிகராகப் பார்ப்பதை விட, அகரம் மூலம் ஏதோ செஞ்சுட்டு இருக்கேன் என்பதை பல மடங்கு உயர்வாக பார்க்கிறேன். அது தான் பெரிய நிறைவு கிடைக்கிறது. வீட்டில் அப்பா – அம்மாவுக்கு, குழந்தைகளுக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் பண்ணியாச்சு. இனிமேல் நினைக்கிற, பண்ற ஒவ்வொரு விஷயமும் அகரமுக்காக மட்டுமே இருக்கணும் என்பது என் ஆசை. அகரம் மூலமாக செய்ய வேண்டியது கடல் அளவுக்கு இருக்கிறது. அதை செய்வதற்கு யாரை எல்லாம் பார்க்க வேண்டுமோ, எந்த கதவுகளை எல்லாம் தட்ட வேண்டுமோ அனைத்துமே தட்டப்படும்.
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். அகரத்தில் இருப்பவர்கள் மாணவர்கள் வேலைக்குச் செல்லும் வரை அண்ணாக்களாகவும், அக்காக்களாகவும் கூடவே இருப்பார்கள். உதவிக் கேட்டு வருபவர்களை விட, அகரத்தினால் தேடிப் பிடித்து படிக்க வைக்கிற மாணவர்கள் அதிகம். கிராமப்புறத்திலுள்ள மாணவர்களுக்கு இன்னும் நிறைய சப்போர்ட் தேவைப்படுது. நகர்ப்புறத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளுக்கு அவர்களால் முடிந்த ஏதாவது ஒரு உதவி செய்தாலே பெரிய மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்கள் நடைபெற்றால், ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.”என்றார்.