சமீப காலமாக அரசியல்வாதிகளை கடுமையாகச் சாடி வரும், திமிரு பிடிச்ச திறமையான நடிகர் பிரகாஷ்ராஜ். பாலசந்தரோட சகவாசம் என்பதால அந்த திமிரோ? என்னவோ? அவரோட நிழல் முத்துராமன் கார்த்திக்கோட மானேஜர் கஃபாருகிட்ட தான் கேட்கனும் . சரி அது ஒரு தனிக்கதை அப்பறமா பாத்துக்கலாம்.
பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இந்துஜா, சமுத்திரக்கனி நடிப்பில், வாழ்வியல் படங்களின் இயக்குநர் ராதாமோகன் இயக்கியிருக்கும் படம் ‘60 வயது மாநிறம்’ .தயாரிப்பு பிரம்மாண்டங்களின் பிதாமகன் கலைப்புலி தாணு.
அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர் அப்பழுக்கில்லாத அப்பா பிரகாஷ்ராஜ்.
அப்பாவை தனது அக்கறையின்மையினால் தொலைத்துவிட்டுப் பின்னர் தேடுகிற பிள்ளை விக்ரம் பிரபு. நாகரீக இயந்திர வாழ்க்கையின் இரும்புப் பிடியில் சிக்கியவர்களில் இவரும் ஒருவர்..
இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே திரையில் பார்க்கிற கதை. நிஜத்தை நேரில் பார்க்கிற வாய்ப்பு. இயல்பான கதை நிகழ்வுகள், இதயத்தை பிசைந்து விடும் வசனங்கள். ஆங்காங்கே கண்ணீரை துடைத்துக் கொள்ள கைக்குட்டை தேடும் கைகள். ஆண் அழுதால் அடுத்த சீட்டுக்காரர் ஒரு மாதிரியாகப் பார்த்து விடுவாறே என்றால் அங்கேயும் நம் கதைதான்!
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஒவ்வொரு அப்பாக்களின் பாசமும் தியாகமும் இவ்வளவு இருக்கா? பெற்றவரை உதாசீனப்படுத்தியவர்கள் உள்ளம் கசியும்காட்சிகள் நிறைய! கொலைகாரன் சமுத்திரக்கனியிடம் சிக்கி விட்ட பிரகாஷ்ராஜ், அவர்தான் தனது பிள்ளையென நினைத்துப் பேசுகிறாரே மறக்கக்கூடிய காட்சியா?
டாக்டர் இந்துஜாவிடம் தனது காதல் கதையைச் சொல்கிறபோது விசும்பாமல் இருக்க முடியவில்லை. அட அந்த வெள்ளை நாய் கருப்பு நாய் கதையில் எந்த நாய் ஜெயிக்கிது சார்? நம்மைக் கசக்கிப் பிழிந்து விட்டாரே பிரகாஷ்ராஜ்! இவருக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்றால் தேசியம் என்பது வெறும் வாய்ப் பேச்சுதான்!
உலகமயமாக்களின் உந்துதலில், அப்பாவை கண்டுகொள்ளாமல் அமெரிக்கா செல்வதில் தீவிரம் காட்டும் சராசரி இளைஞனாக விக்ரம் பிரபு .தந்தையைத் தொலைத்து விட்ட உறுத்தல் ஒரு பக்கம் அழுத்த, இன்னொரு பக்கம் அல்சைமர் நோயினால் பதிக்கப்பட்ட அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்படுவாரோ என்கிற தவிப்பும் சேர்த்து வருத்த அழுந்தியிருக்கிறார். நடிகர் திலக குடும்பத்து ‘ஜீன்’ தெரிகிறது
டாக்டராக வருகிறார் ‘மேயாத மான்’ இந்துஜா. இயல்பான நடிப்பும் இதயத்தை தடவும் வசனமும் டாக்டர்களுக்கு நல்ல பாடம்.ஹோமில் சேர்த்தால் மட்டும் போதும் என நினைப்பவர்களின் எண்ணத்தை மாற்றும்.
ராதாமோகனின் ஆஸ்தான பன்முகங்களில் ஒருவர் குமரவேல்,இவரும் மதுமிதாவும் ஜோடி .சுவை கூட்டுகிறது.
பலம் படைத்தவர்களுக்கு மத்தியில் எளிமையானவர்களின் வாழ்க்கையையும், ஆசையையும் அழகான வசனங்கள் மூலம் பளிச்சிட வைத்திருக்கிறார் வசனகர்த்தா விஜி.
இந்த விமர்சகர் விம்மிய காட்சியில் ஒன்று !
மருத்துவமனையில் யாரோ ஒருவரை கணவன் என நினைத்து மனைவி புலம்புவதும் ,உண்மையான கணவன் அருகில் இருந்து பார்ப்பதும் அந்த நோயின் வீரியம் எவ்வளவு கொடுமையானது என்பதை அறைந்து சொல்கிறது.
இளையராஜாவை விட்டால் இந்த படத்துக்கு இசை அமைப்பதற்கு வேறு எவருமில்லை ஆசானே! படத்தின் பளுவை பாதி சுமப்பது இசைஞானிதான்!
குடும்பமாக ரசிக்க வந்திருக்கும் இன்னொரு படம் ‘60 வயது மாநிறம்’