“எனது தகப்பனார் சின்னய்யா மன்றாயர். ரயில்வேயில் உத்தியோகம். புரட்சியாளர். நண்பர்களைப் பார்க்க நெல்லிக்குப்பம் சென்றிருந்த போது பிரிட்டிஸார் வரும் ரயிலுக்கு யார் டைனமைட் வைப்பது என திருவுளச் சீட்டுப் போட்டதில் எனது தந்தையார் பெயர் வந்து விட்டது.
முன்பெல்லாம் திருவுளச்சீட்டுப் போடுவதுதான் வழக்கம். ஆஷ் துறையை சுடுவதற்கு திருவுளச்சீட்டு போட்டுத்தானே வாஞ்சிநாதனை தேர்வு செய்தார்கள். அதே மாதிரிதான் டைனமைட் வைப்பதற்கும் எனது தந்தையார் தேர்வானார்.
விழுப்புரத்தில் ,பிரிட்டிஷ் ராணுவத்தினர் வந்து கொண்டிருந்த ரயிலுக்கு டைனமைட் வைத்து விட்டு திரும்பி ஓடும்போது அப்பாவை போலீசார் சுட்டுப் பிடித்தார்கள். துப்பாக்கியின் பின் பக்கத்தால் அப்பாவில் தலையில் அடித்ததால் பலத்த காயம். ஹி வாஸ் ஷாட் அண்ட் காட்.சரியாக காது கேட்காமல் போய் விட்டது. ஏழு வருஷம் ஜெயில் தண்டனை. வீட்டுக்கு வருகிறவர்கள் எல்லோரும் ‘இவன் பிறந்தான்.அப்பனைத் தூக்கி ஜெயிலில் வச்சுட்டான்’ என்பார்கள்.”
இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் எழுதி வைத்திருக்கும் வாழ்க்கைப் பதிவு.
1928 ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தார்.
“என்றைக்கு என் தகப்பனாரைக் கைது செய்தார்களோ, எந்த நேரத்தில் கைது செய்தார்களோ அதே நேரத்தில்தான் நான் விழுப்புரத்தில் பிறந்தேன்.!அதற்கான சர்டிபிகேட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது.
ஒருமுறை விழுப்புரம் நகராட்சி எனக்கு வரவேற்பு கொடுத்தது.என்னுடைய பிறப்பைப் பதிவு செய்தாரே ஒரு ஊழியர் அவர் மூலம் எனக்கு என்னுடைய சர்டிபிகேட்டை கொடுக்கச்செய்தார்கள்.அப்போது அவருக்கு வயது அறுபது இருக்கும்.அன்று நான் அடைந்த சந்தோசம் போல் என்றும் அடைந்ததில்லை” என்கிறார் சிவாஜி கணேசன்.
இன்று அவரது 90 வது பிறந்தநாள். நினைவு போற்றுவோம்.