“இது நடக்கவே நடக்காது “என்று முடமாகிப்போன ஒற்றுமை என்கிற சவலையை தூக்கி நிறுத்துகிறேன் பார் என்று சில நாட்களுக்கு முன் தமிழ்ச்சினிமாவில் ஒரு முயற்சி நடந்தது.
இயக்குநர் இமயம் பாரதிராஜா ,எஸ்.ஏ.சந்திரசேகர் ,கேயார் ,கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் “தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டி வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து செயல்பட வேண்டும்” என்று பேசினார்கள். இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவரான சத்யஜோதி தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை.
இதை அன்றே சிலர் குறிப்பிட்டு “ஒற்றுமைக்கான சாத்தியம் இல்லை”என்பதாக சொன்னார்கள்.
இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கே.ராஜனிடம் பேசினோம்.
“உங்கள் முயற்சி பயனளிக்கவில்லையே….தமிழ்ச்சினிமாவில் சாத்தியப்படாதது ஒற்றுமை என்பது தெரிந்திருந்தும் அந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது எதற்காக?”
“சங்கத்தில் காசு இல்லிங்க. எலக்சன் நடந்தால் அதற்காகவே தயாரிப்பாளர்கள் 40 லட்சம் வரை செலவு செய்தாகணும்.அந்த பணம் மிச்சப்படட்டுமேன்னு நெனச்சோம்.ஆனா யாரு கேட்டா? சங்கத்தில் 13 கோடி வரை காணாமப்போயிருக்கு. விஷால்தான் பொறுப்பு. இளையராஜாவுக்கு பிறந்த நாள் விழான்னு சொல்லி இசை நிகழ்ச்சி நடந்தது. அவருடைய பிறந்த நாளுக்காக நடந்த நிகழ்ச்சிக்கு பேசுன தொகையை கொடுக்கல .இன்னும் இத்தனை கோடி பாக்கி இருக்குன்னு சொல்லி அவரும் கேஸ் போட்டிருக்கிறார். சங்கம் எப்படி கொடுக்கப்போகுதுன்னு தெரியல. என்னவோ நடக்குதுங்க.”
“இப்ப எத்தனை அணி போட்டி போடுறாங்க?”
“தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, ஜெ.எஸ்.கே.சதீஷ் ,சத்யஜோதி தியாகராஜன்னு மூணு இவங்க நோக்கம் ஜெயிச்சு வந்தா அவங்களுடைய படப்பிடிப்புகளை நடத்துவதற்கு பணம் ஏற்பாடு பண்ணிக்கலாம் என்பதுதான்.!”
“உங்க அடுத்த நடவடிக்கை?”
“ஒற்றுமைக்கு முயற்சி பண்ணினோம்.நடக்கல. தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜட்ஜ் ஜெயச்சந்திரனை நாளைக்கு சந்திச்சு போலியான உறுப்பினர்களை நீக்கி விட்டு தேர்தலை நடத்துங்கன்னு மனு கொடுக்கப்போறோம். வேற என்ன பண்றது?” என்று வெறுப்புடன் சொன்னார் ராஜன்.