நீட் தேர்வு பயத்தால் மதுரை சுபஸ்ரீ, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கியது.இது குறித்து நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்சிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்றும் விமர்சித்திருந்தார். நீட் தேர்வுக்கு எதிரான சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் ஒன்றை எழுதினார்.இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு ஆதரவாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,நிலையில், அவருக்கு ஆதரவாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகிய 6 பேரும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு இன்று (ஆகஸ்ட் 14) கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “மாணவர்கள் மரணம் காரணமாக சூர்யா தெரிவித்த கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீட் தேர்வு காரணமாக 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதன் வெளிப்பாடாகவே, சூர்யா அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த கருத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ளனர். ஆகவே, சூர்யா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இந்த விஷயத்தை பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.