
மூன்று வருட காத்திருப்பு. சீயான் விக்ரமின் ‘கோப்ரா ‘எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு. எத்தனை வேடங்கள் போட்டிருக்கிறார்,அவைகளில் எவையெவை நம்மை ஈர்க்கப்போகிறது என்கிற துடிப்புடன் சாதாரண ரசிகனாக நாமும் அமர்ந்தோம்.
வெண்திரையில் தணிக்கைக்குழுவின் சான்றிதழ் காட்டப்பட்டபோது “இவ்வளவு நீளமா ” என்கிற தவிப்பு இருந்தது…
ஆனால் கதையோட்டத்தில் சற்றே மறக்கிறோம்.
ஸ்காட்லாந்து இளவரசர் கொலை. இந்தியாவில் ஒரு முதலமைச்சர் கொல்லப்படுகிறார். ரஷ்யாவில் முக்கியமான ராணுவ அதிகாரியை போட்டுத் தள்ளி விடுகிறார்கள்.இப்படியாக பல நாடுகளில் படுகொலை நடக்கிறது.
அத்தனை கொலைகளும் நம்ம சீயான் விக்ரம் நடத்தியது.வெவ்வேறு வேடங்களில்.!விக்ரமின் பெயர்தான் ‘கோப்ரா’.
அல்ஜீப்ரா மாதிரியான கணிதத்தை வைத்து அவர்களையெல்லாம் போட்டுத் தள்ளினார் என்பது புதிய கதை. நமக்கு புதுசு.
கொலை செய்யப்பட்டவர்கள் அனைவர்க்கும் பன்னாட்டு யங் இண்டஸ்ரியலிஸ்ட் ரோஷன் மேத்யூவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. குறி வைத்து கொல்லப்படுவதற்கு இவர்தான் காரணமா என்கிற பரபரப்பு வித்து விதைக்கப் பட்டுவிடுகிறது.நமக்கு நேரம் போவது தெரியாமல் கதைக்குள் வீழ்ந்து விடுகிறோம்.
எதற்காக அத்தனை கொலைகளை செய்ய வேண்டும்?
ஒரு கணித மேதை வஞ்சினம் கொண்டது ஏன் ? இவரை பிடித்துக்கொடுப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுகிற ஹேக்கருக்கும் கணித மேதைக்கும் என்ன உரசல்?
இப்படியாக பல கேள்விகளுக்கு செய்முறை விளக்கமுடன் பதிலை சொன்னதால் படத்தின் நீளம் அதிகமாகி விடுகிறது.
மொத்த சுமையையும் விக்ரமே தாங்கிக்கொள்கிறார்.ஏழு கெட்டப்புகள் அசராமல் நின்று அடித்து ஸ்கோரை உயர்த்துகிறார். ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் கேமரா கண் இமைக்காமல் காட்சிகளை பதிவு செய்திருக்கிறது. இன்டர்நேஷனல் தரம். நமக்கு ஆங்கிலப்படம் பார்க்கிற உணர்வு.!
ஆக்சன் காட்சிகளில் தனித்த பாணி. தனக்கு நிகர் தானே என்கிற வெறியுடன் களத்தில் இறங்கி காலி செய்திருக்கிறார்.!எக்ஸலண்ட் சீயான்.! உங்களின் எய்ம் புரிகிறது.!
இண்டர்போல் அதிகாரியாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானை இறக்கியிருக்கிறார்கள் .சரியான ஆள் என்பது நடிப்பிலேயே தெரிந்து விடுகிறது. கம்பீரம் ,ஸ்டைல் ,எல்லாமே சூப்பர்.
விக்ரமின் காதலி, பேராசிரியை ஸ்ரீநிதி ஷெட்டி, அடிஷனல் காதலியாக வரும் மிருணாளினி ரவி, கணித மாணவியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன், வில்லனாகவும் பன்னாட்டு நிறுவன இளம் தொழிலதிபராகவும் வரும் ரோஷன் மேத்யூ, அவரது கைத்தடி சுரேஷ் மேனன், பத்திரிகையாளராகவும், கொலை அசைன்மெண்டுகள் பெறுபவராகவும் வரும் கே.எஸ்.ரவிகுமார், மனதுக்குள் இருந்து குரல் கொடுப்பவராக வரும் ஆனந்த்ராஜ் இவர்கள் எல்லோருமே கதைக்குள் வாழ்ந்து விட்ட உணர்வு நமக்கு வருகிறது
‘டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இந்த ’கோப்ரா’ வின் ஞானத்தந்தை.கடுமையான உழைப்பாளி என்பது காட் சிகளில் தெரிகிறது.குறிப்பாக சண்டைக்காட்சிகள். டைமிங் தவறினால் அங்கங்களில் பங்கம் வரும் என்கிற நிலைகளில் காட் சிகளில் தீ பறக்கிறது.
கணக்குப்பாடத்தில் எல்லா மாணவர்களும் கெட்டி என்று சொல்லிவிட முடியாது. அதனால் சாதாரணமானவர்களும் புரிந்து கொள்கிற வகையில் கதையை சொல்லியிருக்க வேண்டும்.ரசிகர்களுக்குள்ளேயே சந்தேகங்களை கேட்கிற வகையில் கதையை கொடுத்திருப்பது பலவீனம். . லாஜிக் மீறல்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இருக்கிறது.காதல் காட்சிகள் ஒட்டவில்லை.
கணக்குப்பார்க்காமல் நீளத்தை நீட்டியிருக்கிறார்கள்.
பாடல்கள் ரசிக்கும் வகையில் இருக்கின்றன.ஏஆர் ரகுமான் பின்னணி இசை எதையோ இழந்து விட்ட உணர்வு.!
கோப்ரா சீயான் விக்ரமின் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்கு தகுந்த விடியலாக வந்திருக்கிறது.












