உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 71. தற்போது அவரது உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக ஐதராபாத் மாஸ் அசோசியேசன் பிலிம் சேம்பரில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் இன்று இரவு சாலை மார்க்கமாக சென்னை கொண்டு வரப்படுகிறது. நாளை காலை சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் திரையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து நாளை மாலை சென்னையில் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் சரத்பாபு மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,” இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்”. என்று பதிவிட்டுள்ளார்.