தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் பேசியதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேசியதாவது,”என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்…`அரசியல்னா என்னங்க ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும்னு நினைக்கிறது அரசியலா… இல்ல ஒரே குடும்பம் மட்டும் நல்லா வாழனும்னு நினைக்கிறது அரசியலா…தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழனும்னு நினைக்கிறதைவிட எல்லாருக்கும் நல்லதுநடக்கணும்னு நினைக்கிறதுதானே அரசியல். அது தான் நம்ம அரசியல்.கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு தினம் தினம் மக்கள் பிரச்சனையை மடைமாற்றி, மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்துகிறார்கள். நமக்கு எதிராக இவர்கள் செய்வது ஒன்றா இரண்டா… மாநாட்டில் ஆரம்பித்து, புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் போனபோது, கட்சி இரண்டாம் ஆண்டு துவக்க விழா என எப்படி எல்லாம் தடைகள் வந்தது.ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி நம்முடைய தோழர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே…. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே…. பெயரை மட்டும் கம்பீரமாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் அதை காண்பிக்க வேண்டும். ஒன்றிய பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சியென அடிக்கடி அறைக்கூவல் விடுத்து விட்டு, இங்கு நீங்கள் செய்வது மட்டும் என்ன ஆட்சியாம்? அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சி தான் இங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள்.ஒரு கட்சித் தலைவனாக ஜனநாயக முறைப்படி என் கழகத் தோழர்களையும், என் நாட்டு மக்களையும் சந்திப்பதற்கு தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி மக்களை பார்ப்பதற்கு முடிவு செய்து விட்டால் நான் போயே தீருவேன். ஆனால் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு காண்கிறான் என்று சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று சொல்கிறீர்கள். பிறகு ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம். காற்றை தடுக்க முடியாது. அதையும் மீறி தடுக்க நினைத்தால், சாதாரண காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாக கூட மாறும்.இந்த மண் பிளவுவாத சக்திக்கு எதிரான சகோதரத்துவ மண். சமய நல்லிணக்கத்தை பேணும் சமூக நீதிக்காண மண். இதை நாம் பாதுகாத்தே தீர்க்க வேண்டும் என உங்கள் எல்லோரையும் வேண்டி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
.தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் மன உளைச்சலை தரக்கூடியதாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை.அதற்கெல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரிகள் அரசுதான் காரணம். இந்த நிலை மாற வேண்டும். அதற்கு இருக்கும் ஒரே வழி இங்கிருக்கும் உண்மையான மக்களாட்சி மலர வேண்டும். அது வரவேண்டும் என்றால் இவர்களை மாற்ற வேண்டும். அதற்கு என்ன வழி? அதற்கு என்ன செய்யப் போகிறோம்? தினமும் மக்களை சென்று சந்தியுங்கள். அவர்களோடு பேசுங்கள். ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அவர்களுடைய பிரச்னைகளைக் கேட்டு அதை தீர்ப்பதற்கான வழிகளை யோசிங்கள். அப்போதுதான் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்.
அவர்கள் உள்ளத்தில் ஆழமான நம்பிக்கை விதைத்து விட்டு, அதற்குப்பிறகு நிமிர்ந்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே… உங்கள் ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தினால் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில் உங்களை அப்பா என அழைக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள்.
உங்களால் தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் என் சகோதரிகளான தமிழ்நாட்டுப் பெண்கள் தான், உங்கள் அரசியலுக்கு, உங்கள் ஆட்சிக்கு, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப் போகிறார்கள்.
தமிழ்நாட்டில் பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப் பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதி வாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், டங்ஸ்டன், விவசாயிகள், மின் கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் எனப் போராட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.”மாண்புமிகு மோடி ஜீ அவர்களே… என்னமோ உங்க பேரெல்லாம் சொல்ல எங்களுக்கு பயம் மாதிரி சொல்லிடுறீங்க; ஏன் ஜீ… தமிழ்நாடு தமிழர்கள்னாலே அலர்ஜி?. தமிழ்நாட்டில் இருந்து வரும் ஜி.எஸ்.டி.யை வாங்கிக்கிறீங்க, ஆனா பட்ஜெட்ல நிதியை தரமாட்றீங்க… இங்க உள்ள பிள்ளைகளுக்கு நிதி தராம மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீங்க. தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்… ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்கள் ஆரம்பிக்கும் போதே எல்லாம் புரிந்து விட்டது பிரதமர் சார். உங்கள் திட்டம் என்ன? எங்கெல்லாம் எப்படி எல்லாம் இந்த நாட்டை கொண்டு போவீர்கள் என்பதெல்லாம் அப்போதே புரிந்து விட்டது. உங்களிடம் நாங்கள் சொல்லிக் கொள்வதெல்லாம்… தமிழ்நாட்டை மிக கவனமாக கையாளுங்கள். பலருக்கு தண்ணி காட்டிய மாநிலம் தமிழ்நாடு. இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும். தமிழகத்தில் இரண்டு முனை போட்டிதான். அது தவெக மற்றும் திமுக இடையே தான். “,இவ்வாறு அவர் பேசினார்












