பிறக்கும்போதே தாயை இழக்கும் சர்வானந்த், அவரது தந்தை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் ராஜசேகர் பராமரிப்பில் வளர்கிறார். ராஜசேகரைப் போலவே மோட்டார் சைக்கிள் விளையாட்டில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார், சர்வானந்த். தனித்திறமைகளோடு விளங்கும் சர்வானந்தை தனது பயிற்சியின் மூலம் சிறந்த வீரராக உருவாக்குகிறார், ராஜசேகர். இந்திய அளவில் மட்டுமின்றி, உலகளவில் நடக்கும் மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டுக்கு தயாராகி விடுகிறார், சர்வானந்த். தன்னால் முடியாத சாதனையை தன்னுடைய மகன் சர்வானந்தை வைத்து சாதிக்கத்துடிக்கிறார், அதற்காக ஏற்பாடும் செய்கிறார் ராஜசேகர். இந்நிலையில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்படும் விபத்துகளை எண்ணி கவலைப்படும், சர்வானந்தின் மனைவி மாளவிகா நாயர் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிப்பதுடன், ராஜசேகரிடமிருந்து சர்வானந்தையும் பிரித்துவிடுகிறார்.
இதன் காரணமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தும் அமைப்புகளிடமிருந்தும், ஸ்பான்சர்களிடமிருந்தும் ராஜசேகருக்கு அவப்பெயர் உருவாகிறது. காலப்போக்கில், தந்தையின் நிலை அறிந்து கவலைப்படும் சர்வானந்த், தந்தை சாதிக்க நினைத்ததை, பல தடைகளுக்குப் பிறகு எப்படி சாதிக்கிறார். என்பது தான், ‘பைக்கர்’.
சர்வானந்த், மோட்டார் சைக்கிள் பந்தய வீரராகவே மாறிப்போயிருக்கிறார். தனது தோற்றம் முதல் நடிப்பு வரை, அப்படியே ஒரு பைக் ரேசராக பாவனை செய்திருக்கிறார். காதல் மனைவியின் சொல்லைத்தட்டாத கணவனாகவும், அப்பாவின் கணவுகளுக்கிடையேயும் நடுவில், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

மாளவிகா நாயர், காதலியாகவும், மனைவியாகவும் கணவனின் கனவுகளுக்கு சப்போர்ட் செய்யும் கதாபாத்திரமாகவும், நன்றாகவே நடித்திருக்கிறார். சர்வானந்தின் தந்தையாக நடித்திருக்கும் ராஜசேகர், நேர்மையான இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய வீரராகவும், சிறந்த கோச்சாகவும் நன்றாகவே நடித்திருக்கிறார். அழகிப் போட்டியோ, விளையாட்டுப் போட்டியோ அங்கே தொழிலதிபர்களின் தொல்லை எப்படி இருக்கும் என்பதை, அழகாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார், அதுல் குல்கர்னி.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகளின் பங்களிப்பினை விட, தொழில்நுட்பக்கலைஞர்களின் பங்களிப்பு, நிச்சயம் அதிகமாக தான் இருக்க வேண்டும். சீறிப்பாயும் மோட்டார் சைக்கிள்களை சிரத்தையுடன் படம் பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் ஜெ.யுவராஜ். அவருடைய கேமிரா படம் பிடித்ததை சிறப்பாக தொகுத்து, படம் பார்ப்பவர்களை நகம் கடிக்க வைக்கும் அளவிற்கு ஆக்கிவிடுகிறார், படத்தொகுப்பாளர் அனில் குமார் பலாசா. காட்சிகளுக்கேற்றபடி இசையமைத்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக, ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் இந்த மூவரும் சேர்ந்து, கிளைமாக்ஸில் நடக்கும் பந்தயக்காட்சியில், சர்வானந்த் ஜெயித்து விடுவாரா, மாட்டாரா!? என பதை பதைக்க வைத்து விடுகின்றனர்.
அபிலாஷ் ரெட்டி, எம்.வி.எஸ்.பரத்வாஜ், ஷ்ரவன் மடலா ஆகியோரது, சரிவிகிதமாக கலக்கப்பட்ட சென்டிமென்ட், ஆக்ஷன் கதை மற்றும் திரைக்கதை, ரசிக்க வைக்கிறது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்களை ஒருங்கிணைத்து மோட்டார் சைக்கிள் பிரியர்களுக்காக ஒரு படத்தினை கொடுத்திருக்கிறார், இயக்குநர் அபிலாஷ் ரெட்டி.
‘பைக்கர்’ – சாகச வீரன்!












