குறைந்தது 3 பேருக்காவது கடுமையான தண்டனை கொடுத்தால் தான் திரையுலகில் கந்துவட்டிக்கு கொடுப்பவர்களுக்கு பயம் வரும் என்று விஷால் தெரிவித்துள்ளார். கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட படத் தயாரிப்பாளர் அசோக் குமார், தன் முடிவுக்கு காரணம் பைனான்ஸியர் அன்புச்செழியன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தது, தமிழத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் அன்பு செழியனுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் விஷால் அன்புசெழியன் விவகாரம் குறித்து கூறியதாவது,’எவ்வளவு டார்ச்சர் செய்திருந்தால் அசோக் குமார் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்திருப்பார். அவரின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். கந்து வட்டி பிரச்சனையை தீர்க்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.சினிமா மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் கந்துவட்டி பிரச்சனை உள்ளது. ஆனால் சினிமா துறையில் கந்துவட்டி பிரச்சனை அதிகம் உள்ளது. குறைந்தது 3 பேருக்காவது கடுமையான தண்டனை கொடுத்தால் தான் கந்துவட்டிக்காரர்களுக்கு பயம் வரும்.ரூ. 30 கோடியில் நடிகர் சங்க கட்டடம் கட்ட சென்னையில் கலை நிகழ்ச்சி நடத்தினோம். அடுத்தாக ஜனவரி மாதம் 5, 6 தேதிகளில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்துகிறோம்.மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் உள்பட 250 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்க கட்டடம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும்’ என்கிறார் விஷால்.