மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்த் , பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர்ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா , கவிஞர் யுகபாரதி , இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி , படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி , எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , Stunner ஷாம் , நடன இயக்குநர் சுரேஷ் , நடிகர் மைம் கோபி , தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன் , நடிகர் மாரிமுத்து , நடிகர் தம்பிராமையா , நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் விஜயகாந்த் பேசியதாவது :-
இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்கம் கொடுத்து பேசி இருக்கலாம். ஆனால் எல்லோரும் சண்முக பாண்டியன் உயரமாக உள்ளார் அவரிடம் நாங்கள் அனார்ந்து பார்த்து தான் பேசவேண்டி இருந்தது என்று தான் சொல்கிறார்கள். என்னுடைய மனைவி படத்தின் தயாரிப்பாளர் சுப்பு அவர்களை பற்றி நிறைய கூறியுள்ளார். இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து உருவாக்கியுள்ள இப்படத்துக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார் கேப்டன் விஜயகாந்த்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,‘மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை தான் நான் முதல் முறையாக பேசும் சினிமா மேடை. நான் தான் மதுரவீரன் படத்தின் கதையை முதலில் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டேன். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. கதையை பற்றி நான் கேப்டனிடம் கூறியதும் இந்த கதையை உடனடியாக கேட்க வேண்டும் என்று கூறினார். அதற்கு காரணம் படத்தில் ஜல்லிகட்டை பற்றி கதை உள்ளது என்பதால் தான். ஜல்லிக்கட்டு நம்முடைய கலாச்சாரம். இந்த காலத்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக தான் முதன் முறையாக ஒன்றாக கைகோர்த்து போராடினார்கள்.
அதனால் இந்த கதை கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினார் கேப்டன். கேப்டன் விஜயகாந்த் “ மதுரசூரன் “ எனும் படத்தில் நடித்தார். மதுரவீரன் புரட்சிதலைவர் MGR அவர்களின் டைட்டில். புரட்சிதலைவர் MGR அவர்களின் டைட்டிலில் என்னுடைய மகன் நடிப்பது மகிழ்ச்சியாகவும் , பெருமையாகவும் உள்ளது.
மதுரவீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்துள்ளது. கேட்டவுடன் மெய்சிலிர்க்கும் வகையில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது தனி சிறப்பு இவ்வாறு அவர் பேசினார் .