அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகும் முன்னரே தமிழத்தில் கடந்த ஒரு வார காலமாக காவிரி மேலாண்மையும் ஸ்டர்லைட்டும் மஞ்சள் பாஸ்பரசாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மத்திய, மாநில ஆளும் கட்சிகள் தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் எரியும் தீயை அணைக்காமல் மத்திய அரசு ‘கர்நாடக” சங்கீதம் பாடுவதற்காக காத்திருக்கிறது.மாநில அரசு நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.
இதற்கிடையில் ஒட்டு மொத்த தமிழ்த் திரை உலகமும் அறவழியில் இன்று போராட்டத்தை தொடங்கியது .காவல் துறை அனுமதித்த காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலான குறுகிய காலத்தில் நடத்த வேண்டிய கட்டாயம். ஆளாளை பேசவிட்டால் அரசியல் புகுந்து விடும் என்பதால் நடிகர் சங்கத்தலைவர் நாசர் மவுன போராட்டமாக அறிவித்து விட்டார். இதனால்தானோ என்னவோ தனது கருத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி தனது வீட்டு வாசலிலேயே பத்திரிகையாளர்களிடம் பேசி விட்டார்.
“எல்லோருடைய கோரிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டியது என்பதுதான்! இதை செய்ய மறுத்தால் மத்திய அரசு மக்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியதாகி விடும். காலத்தை மத்திய அரசு வீணாக்கிக்கொண்டிருக்கிறது.உடனடியாக வாரியம் அமைக்காவிட்டால் ஒட்டு மொத்த தமிழர்களுடைய கோபத்தை சந்திக்கவேண்டியதாகிவிடும். ஸ்டெர்லைட் ஆலையினால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும் மக்களுக்கு நன்மையில்லை என்றால் தடை செய்து விடவேண்டும்.
ஐபிஎல் லில் விளையாடும் சென்னை கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு சின்னம் அணிந்து விளையாடலாம். பார்க்க போகிற இளைஞர்கள் கருப்பு துணி போட்டுக்கிட்டுப் போகலாம்” என்கிற யோசனையையும் தெரிவித்தார்.
கமல் எனக்கு எதிரியே இல்லை.எனக்கு எதிரி ஏழ்மை.”என்று ஒரு கேள்விக்குப் பதில் சொன்னார்.