கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் அச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் மிக மிக அநாகரிகமான வார்த்தைகளால் ஊடகத்துறையினர் குறித்து ஒரு கருத்தை பகிர்ந்து இருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். என்றாலும் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எஸ்.வி. சேகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில்,தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பில் இச் சம்பவம் குறித்து எஸ்வி சேகருக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,”ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது …அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும் , முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால் எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பதிவில், ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு செய்தியை பதியவிட்டுருக்கிறார்.பொதுவாக முகநூலில் நமக்கு வரும் கருத்து பதிவினை, நமக்கு உடன்பட்டால் மட்டுமே நாம் அதை மற்றவருக்கு அனுப்புவோம் . அந்த வகையில்எஸ்.வி.சேகர் தனக்கு வந்த பதிவின் கருத்துக்கு உடன்பட்டே மறுபதிவு செய்து இருக்கிறார். அதில் உள்ள கருத்து பதிவிற்கு அவர் தார்மீக பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும். கலைத்துறையால் சமூகத்தில் அறியப்பட்ட இவர் பொறுப்பற்ற முறையில் பெண்களை இழிவாக பதிவு செய்துள்ளார். இதை தென்னிந்திய நடிகர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.