ஆளும் கட்சியான பிஜேபிக்கு கடுமையான எதிர்ப்பாளி பிரகாஷ்ராஜ். டுவிட்டரில் நெருப்புகளை அள்ளிக் கொட்டுவார். அவர்களின் ஏவுகணையான வருமானவரிதுறையை இன்னும் பிரகாஷ்ராஜின் மீது ஏவி விடாமல் இருக்கிறார்கள். ஒருவேளை தேர்தல் சமயத்தில் ஏவினால் கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்று எண்ணி இருக்கலாம்.
ஆனாலும் மிகவும் தைரியமாக கன்னடத் தேர்தலில் சந்துக்கு சந்து கூட்டம் போடுகிறார். தலித் ,மற்றும் கலைத்துறையை சேர்ந்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விவாதங்களிலும் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டுகிறார்.
“பெங்களூருவை விட்டு சென்னைக்கு போய்ச் சேர்ந்த போது கையில் இருந்தது 120 ரூபாய். முப்பது வருஷங்களில் முன்னூறு படங்கள்.!ஒரு வருஷத்தில் 100 நாள் வேலை பார்க்கிறேன். மூன்று மாநிலங்களில் எனக்கு வீடுகள் ,பண்ணைகள் இருக்கு! ( அப்புறம் என்ன அவரே சொல்லிட்டார். சோதனைகளை எப்ப ஆரம்பிக்கப் போறீங்க?) நான் சேர்த்த சொத்தெல்லாம் என் திறமையாலா? இல்ல. மக்களின் அன்பு ஆதரவு தேடித்தந்தது.
மக்களுக்கு உதவுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். தலித் சகோதரர்களும் ,கலை உலக நண்பர்களும் இணைந்து சுற்றுப்பயண ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.
நான் எந்த அரசியலிலும் இல்லை.மக்களுக்கு நன்மை தரக்கூடிய கேள்விகளை கேட்பதற்கு கடமைப்பட்டவன் அதனால்தான் கேட்கிறேன்.மகாத்மாகாந்தி, அண்ணல் அம்பேத்கர், ஏபிஜே அப்துல்கலாம் ஆகியோர் தேர்தலில் நின்றதில்லை.ஆனால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.”என்கிறார்.
“சீத்தாராமையா ரிட்டையர் ஆகவேண்டியவர்.மக்களுக்கு நன்மைகள் செய்திருக்கிறார்.ஆனாலும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.அவர் காங்கிரஸ்காரர் இல்லை.அவர் சோசலிஸ்ட்!” என்றார் பிரகாஷ்ராஜ்.