“எனது தாயார் என்னை ஆசையுடன் வளர்த்து ஆளாக்கினார். நான் நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டார், அவர் வைத்த பெயர்தான் சிவகுமார்,இனி அந்தப்பெயரிலேயே என்னை அழையுங்கள் ” என்கிறார் இதுநாள் வரை ‘சிவாஜி தேவ்” என அறியப்பட்டவர்.
“அவ்வளவு பாசமா பக்தியா?”
“என் அம்மா மறைந்து இரண்டு ஆண்டுகள். எனக்கு தூணாக இருந்து என்னைத் தாங்கியவர்.அவர் இறந்த பிறகு உடைந்து போனேன். வெறுமையாய் உணர்ந்தேன். வாய்ப்புகள் வந்தும் என்னால் முழுமையாக ஈடுபட இயலவில்லை. எனது அண்ணனும் சித்தி ஸ்ரீ பிரியாவும் பக்க பலமாக இருந்தார்கள்..தற்போதுதான் சற்று தெம்புடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனது படத்தின் ஆடியோ விழாவில் மனம் திறந்து பேசுவேன்” என்றார் சிவகுமார்.
“மிகப்பெரிய நடிகரின் பெயர் ஆயிற்றே?”
“நல்லதுதானே!அவரைப் போல திறமையுள்ள நடிகனாக வருவதற்கு உதவுகிற உந்து சக்தி என சொல்லலாமே! யார் இந்த பையன் இவ்வளவு சிறப்பாக நடிக்கிறானே என்று கேட்கவேண்டும்.தாத்தாவின் பெயரை பயன்படுத்திக்கொண்டு முன்னேற பார்க்கிறான் என்று யாரும் சொல்லி விடக்கூடாது.
“வாழ்த்துகள் .உங்களுக்கும் சுஜா வருணிக்கும் நிச்சயம் நடந்து விட்டதாக சொல்கிறார்களே? இருவரும் திருப்பதியில் எடுத்துக் கொண்ட படமும் வந்திருக்கிறது?”
“நாங்கள் பத்து வருடமாக காதலிக்கிறோம். நாங்கள் இருவரும் ‘ரிலேஷன்ஷிப்பில்தான் இருக்கிறோம்.இதை மறுப்பதற்கில்லை.இது எங்களின் தனிப்பட்ட வாழ்க்கை.அதை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. திருப்பதியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்பது எங்கள் இருவரது ஆசை! அதற்கு கட்டுப்பாடுகள் அதிகம். பல வருட காத்திருப்புக்குப் பிறகு எங்களுக்கு அந்த சேவை கிடைத்தது. வேட்டி.புடவை என்பது அங்கு சம்பிரதாயம் கட்டுப்பாடு. அதை நாங்களும் பின்பற்றி தரிசனம் செய்தோம். இதை மறைப்பதற்கோ ஒளிப்பதற்கோ இல்லை. காதலர்கள் தெய்வ தரிசனம் செய்யக்கூடாதா?”என்று கேட்கிறார்.
இந்த வருடத்தின் இறுதியில் திருமணம் நடக்கலாம் என தெரியவருகிறது,