ஒரு கட்டை விரலை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் இந்த ‘டெக்னாலஜி ‘ உலகத்தில் செய்ய முடியும் என்பதை புரியும்படியாக சொன்னதற்காக அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு ஒரு புத்தகம் பரிசு. ( பொன்னாடை என்பது பன்னாடை என்பதாகி விட்டது. ) ராணுவ மேஜருக்கே அந்தக் கதி என்றால் சாமான்யனின் கதை என்னவாகும் என்பதை சுருக்கமாக நறுக்கென காட்டி இருக்கிறார் .நமக்கு எச்சரிக்கை உணர்வை செலுத்துகிற ஆதார் படம்.
ராணுவமேஜர். உயரமும் உடல்வாகும் விஷாலுக்கு கச்சிதம், முறைப்பும் விறைப்புமாக இருக்கிற விஷாலை மனநல மருத்துவர் சமந்தாவிடம் அனுப்புகிறார்கள்.( என் பெயர் சூர்யா நினைவுக்கு வந்தாலும் டோட்டலி இது வேறு தளம்.) அப்பா டெல்லி கணேஷ் .மகனுக்கு அடங்கிப்போற குணவான். விசாலின் தங்கைக்கு கல்யாணம்
நேர்மையான வழியில் எந்த வங்கியில் கடன் கிடைக்கிறது.ஏதாவது ஒரு பொய் சொல்லித்தானே வாங்க வேண்டியதிருக்கிறது. விஷால் குறுக்கு வழியில் வங்கியில் பெற்ற கடனை உரியவர்களுக்கு தெரியாமலேயே ஹேக்கர்கள் வழித்தெடுத்து விடுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமாகிறது, கல்யாணம் நடந்ததா, விஷால் எப்படி ஹேக்கர்களை கண்டு பிடிக்கிறார் என்பதை நம்மை நெளிய விடாமல் சொல்லியிருப்பது சிறப்பு!
பன்முக நடிகனுக்கு எந்த வேடம் கொடுத்தால் என்ன? ஜெய்ஹிந்த் அர்ஜுனை சுவருக்கு சுண்ணாம்பு அடிக்கவிடவில்லை. எந்த பாகுபாடும் இல்லாமல் வங்கி வழியான வர்த்தகமுறைப்படி ‘ஸ்வாஹா’ செய்வதில் செம கில்லாடி!
பணத்தை சுருட்டுவது மட்டுமில்லை உன் ஓட்டு யாருக்குப் போகும் என்பதைக்கூட ஹேக்கர்ஸ் தீர்மானிக்கமுடியும் என்கிற வசனம் கேட்டபோது கர்நாடக தேர்தல் முடிவும் அப்படித்தான் ஆகிவிடுமோ என்கிற நியாயமான பயம் வருகிறது. ஹெக்கர்சின் ஆதிக்கம் சின்னஞ்சிறிய ரிச்சி ஸ்ட்ரீட் வரை விரிவாகி இருக்கிறதய்யா!
வசனங்களில் நெளிவு சுழிவு இல்லாமல் நேரடியாகவே குத்துகிறார்கள். இத்தகைய உணர்வுகள் இந்த நாட்டுக்கு தேவை..
“என்னடா ஞானவேல்ங்கிற பேரை கேட்டாலே ஓடுறாங்க” என்பது இருட்டு அறையில் முரட்டுக்குத்து எதிரொலியோ?
விஷாலும் அர்ஜுனும் மோதுகிற காட்சிகளில் பட்டாக்கத்திக்கு சாணை பிடிக்கலாம்..அந்தளவுக்கு உக்கிரம். இசை அமைப்பாளர் யுவனின் பின்னணி இசையில் செவன்டி எம்.எம் .தியேட்டர் அதிர்கிறது. காட்சி அமைப்புகள் மிகவும் பலம்.ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்சின் கற்பனைக்கு இயக்குநர் மித்ரனின் இணக்கம் படத்தின் தரத்தை உயர்த்தி இருக்கிறது.
விஷால் -சமந்தா காதல் காட்சிகளில் நெருக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்காமல் கதையின் போக்குடன் வசனங்களில் காதலை கடத்தி இருக்கிறார்கள்.
இரும்புத்திரை பார்க்கவேண்டிய படம்.