வட சென்னை என்றாலே சினிமாக்காரர்கள் அதை பெரிய பூச்சாண்டி ஊர் என்பதாக பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள். அருவா சேகரு, பட்டாக்கத்தி பயில்வான் ,பல்பு மருது இப்படி எத்தனையோ பட்டங்களுடன் கேரக்டர்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட பூமியில் இப்படிப்பட்ட தண்ணீர் பாம்புகளும் இருக்கிறது என்பதைத்தான் செயல் படத்தில் நையாண்டியுடன் சொல்ல முயற்சி பண்ணி இருக்கிறார்கள்.
மார்க்கெட் ஏரியா தாதா சமக் சந்திராவை பொளந்து கட்டி பொட்டலம் கட்டி விடுகிறார் ஹீரோ ராஜன் தேஜஸ்வர். நம்ம தனுஷை விட கொஞ்சம் தாட்டி. இந்த ஒரு நாள் பாரத சண்டையினால் தாதாவை யாரும் மதிப்பதில்லை. மாமூல் கேட்டுச்சென்றால் கேவலப் படுத்துகிறார்கள். புட்டுக்கிட்டுப் போன அவமானத்தை மீட்டு ,இழந்த மாமூல் வசூலை ரினிவல் பண்ண வேண்டும் என்றால் இதுதான் வழி என ஒரு ஐடியாவை கொடுக்கிறார்கள் கைத்தடிகள்.
எந்த இடத்தில் தாதா அடிவாங்கினாரோ அதே இடத்தில் ஹீரோவை துவம்சம் பண்ணினால் எல்லாமே மீட்கப்பட்டு விடும் என்பது ஐடியா.
ராஜன் தேஜஸ்வரும் ஒப்புக்கொள்ள முடிவு என்ன ஆகியது என்பது மீதிக் கதை.
எல்லாப் புகழும் கனல் கண்ணனுக்கே! ஆக்சன் பிளாக்கில் செம்மரமே தவிடு பொடி ஆகும் என்றால் காட்சி எப்படி இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
காதல் காட்சிகளில் ராஜன் தேஜஸ்வர்- தருஷியின் நெருக்கம் இளையராஜாவின் ஒளிப்பதிவு எல்லாமே அழகு.
ஹீரோவுக்கு டப்பிங் பேச வைத்திருக்கலாம்.
இயக்குனர் ரவி அப்புலு கேரக்டர் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஹீரோ ராஜன் தேஜஸ்வருக்கு வழியை காட்டி விட்டார் தயாரிப்பாளர்.அதை செயல் படுத்தவேண்டியது நாயகனின் கடமை.