“ஒருத்தனை அழிச்சிட்டுத்தான் இன்னொருத்தன் முன்னேறனும்.இதான்டா கார்ப்பரேட்” என்கிற ஒற்றை வரியை டைரக்டர் திரு அரசியலுக்குப் பயன்படுத்தாமல் கால் டாக்சி மீது போட்டு விரிவாக்கி இருக்கிறார். யாருக்கும் எளிதில் கிடைக்காத நவரச நாயகன் கார்த்திக், கவுதம் கார்த்திக் கூட்டணி அவருக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் .
அதை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறாரா, சறுக்கி விட்டாரா ?பார்க்கலாம்.
விருதுகளை வருடந்தோறும் வாங்கும் இயக்குநர் மகேந்திரனின் கால்டாக்சி கம்பெனியின் செல்வாக்கினை சிதைத்து விட்டால் அடுத்த வருட சிறந்த விருது நமக்குத்தான் என்று சந்தோஷ் பிரதாப் விதைக்கும் விஷ வித்துகள் யார் எவரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது கதை.
தனிக்கட்டை கார்த்திக்.இவரின் மகன் கவுதம் கார்த்திக் பாக்சிங் கட்டை. மகனையும் ,தனது பழைய கார் பத்மினியையும் கார்த்திக் உயிரென பாதுகாக்கிறார்.அவ்வப்போது பத்மினி மக்கர் பண்ணினாலும் தனக்கு டக்கர் அந்த கார்தான் என விற்க மறுக்கும் கார்த்திக் பழைய நவரசநாயகனாகவே இளமையுடன் இருப்பது ஆச்சரியம்.பைரவி செத்துவிட்டார் என்றதும் அவரது முகத்தில் படரும் துயரம் எப்படியெல்லாம் கதைசொல்கிறது? அபாரம்! அப்பா-மகனின் உறவு எத்தன்மை வாய்ந்தது என்பதை ஆட்டம் பாட்டு என முற்பாதி கடக்கிறது. மொத்தக் கனமும் பிற்பாதியில்தான்.டுவிஸ்ட்டுகள் சுவையானவை.
கவுதம், ரெஜினா காதலில் காட்சிகளில் ‘குதிரையின் வேகம்.’! ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் இதற்கென எத்தனை லென்சுகளை பயன்படுத்தினாரோ! தொலைந்தது தூக்கம் என பெரிசுகளும் ‘எனர்ஜி’ மாத்திரை தேடுகிற காட்சிகளை தந்தமைக்காக அவருக்கு தனித்த பாராட்டு.
கவுதம் காதல் உணர்வுகளில் இருந்து முழுமையாக விடுபட்டு வேறு ஒரு தளத்துக்கு செல்வதற்கு பார்வையில் பழுது. டாக்டர் .விஜயசங்கரின் ஆலோசனை பெற்றிருப்பதால் ரீல் விட வாய்ப்பில்லை. தந்தைஇல்லாத தனிமை, தந்தைக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கும் இடையில் எத்தகைய உறவு என அறிய துடிப்பது என கவுதம் நடிப்பில் புதிய மெருகு,
இயக்குநர் மகேந்திரனை வில்லனாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.
வரலட்சுமி ,ரெஜினா இருவருமே சிறப்பான நடிகைகள் என்றாலும் வரு சற்று வெயிட்! அனுதாபத்தை அள்ளுவதால் இருக்கலாமோ?
சாம் சி.எஸ். இசையில் எல்லாமே ஹிட் என்றாலும் மனதில் ரீங்காரமிடுவது சோகப்பாட்டுதான்!
முற்பாதி ஜாலி பிற்பாதி உருக்கம் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.