போகிற போக்கில் புழுதியை வாரி இறைப்பதைப் போல சகட்டுமேனிக்கு செக்ஸ் புகார் சொல்லி வருகிறவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு பட உலகின் நடிகை என்பதாக சொல்லிக் கொள்கிறார். ஹைதராபாத் ஹோட்டலில் ராகவாலாரன்சை சந்தித்து வாய்ப்புக் கேட்டதாகவும் அவரது அறையில் கடவுள் படங்களுடன் ருத்திராட்ச மாலைகளும் இருந்தன என்பதாகவும் சொல்லியிருந்தார். இதையெல்லாம் வைத்துக்கொண்டே தன்னை செக்ஸ் ரீதியாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதெற்கெல்லாம் அறிக்கை வழியாக பதில் சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர்,நடிகர்,இயக்குநர் ராகவா லாரன்ஸ்.
“ஸ்ரீ ரெட்டி சொல்லியிருந்தது பற்றி பத்திரிகையாளர்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு கேட்டதினாலேயே இந்த விளக்கத்தை சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.மற்றபடி நான் கவலைப்படவில்லை.
நான் தெலுங்குப்படம் இயக்கியபோது என்னை ஸ்ரீ ரெட்டி வந்து சந்தித்தாக சொல்லியிருந்தார்.அவர் சொல்கிற படம் இயக்கி 7 வருடங்கள் ஆகிறது! அவர் ஹோட்டலுக்கு வந்தபோது எனது அறையில் கடவுள் படங்களும் ருத்திராட்ச மாலைகளும் இருந்ததாக சொல்லி இருக்கிறார், நான் ஹோட்டல் அறையில் பூஜை செய்பவன் அல்லன்.
ஸ்ரீ ரெட்டி.! நான் எந்த தவறும் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும் அந்த கடவுளுக்கும் தெரியும். உன்னுடைய பிரச்னை என்ன? எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள் என்பதாக சொல்கிறாய். உன்மேல் எனக்கு கோபம் வரவில்லை. நீ திறமையான நடிகை என சொல்லிக் கொள்கிறாய்.
வா பத்திரிகையாளர்கள் முன்பாக சந்திப்போம். நான் ஒரு கேரக்டர் தருகிறேன்.நடித்துக் காட்டு! நடனம் ஆடுவதற்கு சில ஸ்டெப்ஸ் தருகிறேன் ஆடிக்காட்டு. நான் போடுகிற கஷ்டமான ஸ்டெப்ஸ் கொடுக்கமாட்டேன். நீ திறமையாக நடித்து விட்டால் வசனங்களை பாவமுடன் சொல்லி விட்டால் நடனமும் ஆடி விட்டால் அடுத்த படத்தில் வாய்ப்பு.அட்வான்ஸ் தருகிறேன்! இதெல்லாம் நான் சொல்வது உனக்குப் பயந்து அல்ல. நான்பெண்களை மதிப்பவன்.என் அம்மாவுக்காக கோவில் கட்டி அதை பெண்களுக்காக அர்ப்பணித்திருப்பவன் என்பதால் சொல்கிறேன்” என அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீ ரெட்டிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.