சரித்திரத்தில் இடம் பெறும் தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் வாசித்தனர். அரசு வழக்கறிஞர்களின் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி தட்டி வைத்தவர்கள் நீதி வழுவா நெறி வழி நின்று தீர்ப்புச்சொன்னார்கள் . அண்ணாவின் அருகில் அருமைத் தம்பிக்கும் இடம் உண்டு .!தர்மம் வென்றது. இனி ராஜாஜி மண்டபம் செல்லலாம்.தீர்ப்பைக்கேட்டதும் ஆ.ராஜா உணர்ச்சி வயப்பட்டு ஸ்டாலினை கட்டித்தழுவினார். ஸ்டாலின் துரை முருகனை கட்டியபடி கதறி அழுது கண்ணீர் விட்டார் .பெருங்கூட்டத்தினரைப் பார்த்து அழுதபடியே ஸ்டாலின் கை கூப்பினார். கலாநிதி, கனிமொழி ஆகியோர் கண்களிலும் கண்ணீர்.
கலைஞர் உடல் தேசியக்கொடி கொண்டு போர்த்தப்பட்டு கம்பீரமாக ராஜாஜி மண்டபத்தில் !
அந்த காட்சியை காண்பதற்காக கனத்த இதயத்தோடு கண்ணீர் பெருக்கெடுத்துத் தமிழகமே திரண்டு வந்திருக்கிறது.அலை அலையாக வருகிற மக்கள் வெள்ளத்தை ஒழுங்கு படுத்தி அனுப்பி வைக்கிறார்கள் காவலர்கள். அழுகுரல் ஒரு பக்கம்.அரசு மீது ஆத்திரம் மறுபக்கம் என மக்கள் கூட்டம் தங்களது தலைவரைப் பார்த்து விட்டு செல்கிறது. கருஞ்சட்டைகள், கருப்பு சிவப்புகொடிகள் ,கலைஞரின் படங்கள் என காணும் இடமெல்லாம் அஞ்சலிகள்.
நா நடுங்கும் அளவுக்கு கலைஞரை கடுமையாக அர்ச்சித்தவர்களும் உயிரற்ற அவரது உடலுக்கு தலை வணங்கி செல்வதையும் காணமுடிந்தது. அதே நேரத்தில் நடக்க இயலாத வாலிபர் தவழ்ந்தபடியே படியேறிச்செல்வதையும் பார்க்க முடிந்தது. இப்படி பல குணமுடையோர் ராஜாஜி மண்டபத்தின் படி ஏறிச்சென்று கலைஞரை வணங்கிச்சென்றார்கள்.