“கல்யாணம் பண்ணிக்காம குடும்பம் நடத்தலாம்.ஆனால் குழந்தை பெத்துக்கக் கூடாது” என்பது கதாநாயகி ரைசாவின் கட்சி. ரொமான்ஸில் ரொம்பவே பின்னுது குழந்தை. அதாவது ‘லிவ் இன் ரிலேஷன்’ !
‘மண்ணள்ளிப் போடு’ என்கிறவர்களை அண்டார்டிகாவுக்கு அனுப்புக.!
“வேணாம்டி கல்யாணம் பண்ணிட்டு பிள்ளைகளைப் பெத்துக்கலாம்” என்றாலும் ரொமான்ஸில் பிச்சு உதறுகிறவர் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளியில் மாமியாரையே புரட்டிய மன்மதன் ஆச்சே! பிக்பாஸ் ஜோடி! நடிப்பா,நிஜமா என்பது தெரியாமல் பல இடங்களில் ‘கலந்து ‘ விடுகிறார்கள். இருவருமே வரவேற்கப் படவேண்டியவர்கள்.
கதையும் இயக்கமும் இளன். இளைஞர் .
அனுபவமோ அல்லது பருவத்தின் இயல்போ தெரியாது கல்யாணம் கட்டிக் கொள்ளாமல் ‘கணவன்-மனைவி ‘போல வாழலாம் என்பதற்கு அழுத்தமாகவே வாதிடுகிறார். இருந்தாலும் அம்மா செண்டி மென்ட். ரேகாவுக்கும் ஹரிஷ்கல்யாணுக்கும் உள்ள பாசம் ஏனோ தானோவென இருக்கிறது.மனதில் பதியவில்லை
ஆனால் மகளின் லிவ் இன் ரிலேஷன் ஷிப்புக்கு அப்பா ஆனந்தபாபு வீடு எடுத்து கொடுக்கிறார். மகளின் கொள்கையை ஆதரிக்கிறார் என்பதில் இருக்கிற வலிமை ரேகாவின் பாசத்தில் இல்லையே பெருமாளே!
கதையோட்டம் எங்கெல்லாம் சுனங்குகிறதோ அங்கெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்து நிற்பவர் யுவன் சங்கர் ராஜா. டஜன் பாட்டு, பின்னணி இசை இரண்டுமே வாரிசின் வளம்.படத்துக்குப் பலம். காதலர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிகிறார்கள்.
ஹரிஷ்கல்யாணுக்கு வேறு பெண்ணுடன் திருமணம். அவளை கர்ப்பவதியாக்கி விடுகிறார். அபார்ஷன் பண்ண வைத்து டைவர்ஸ் வாங்கிக் கொடுத்து தனியாளாக்கி வைத்து ….அப்பப்பா !ரைசாவுடன் இணைத்து வைக்க இத்தனை பாவங்களா பகவானே!
இளையோர் உலகத்தை நம்பி எடுக்கப்பட்ட படம். துள்ளல் ,துடிப்பு இருக்கிறது! புதிய கலாசாரம் எத்தனை பேர் ஆதரிப்பார்கள்?