அறிமுக கதாநாயகியாக ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்..
“ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண் தேவதை’ படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்..
சமுத்திரக்கனி சார் செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார்.. அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் தான் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததும், நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.
இயக்குனர் தாமிரா நம்ம ஊரு பொண்ணுங்கிறதால் என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். இந்தப்படம் ஒப்புகொள்றதுக்கு முன்னாடி சில சந்தேகங்கள் எனக்கு இருந்தது அதுபற்றி அவர் எனக்கு விளக்கம் கொடுத்து, என்னை சம்மதிக்க வைத்தார்.
ஒருநாள் படப்பிடிப்பு தளத்துல இப்படி வசனத்தை இன்னும் பட்டை தீட்டுறபோது ஒரு மிகப்பெரிய விவாதமே நடந்துச்சு.. ஆரோக்கியமான விவாதம் தான்.. ஆனால் படத்துல அந்த காட்சி ரொம்ப சிறப்பா வரும்னு அப்பவே எங்களால் கணிக்க முடிஞ்சது.. அதேசமயம் நாங்கள் பெரும்பாலும் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணிடுவோம் என்பதால டைரக்டர் தாமிரா திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் எடுக்கவேண்டிய காட்சிகளை தாமதம் இல்லாம எடுக்க முடிஞ்சது.

அடுத்தடுத்த படங்களில் குடும்ப தலைவியா நடிக்கிறீங்களேன்னு நிறைய பேர் கேட்டாங்க… குடும்ப தலைவி என்றாலும் இந்தப்படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன்.. ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப்போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா, அடுத்ததா அவங்கள எந்த கேரக்டர்லயும் பொருத்தி பார்க்குற அளவுக்கு ஜனங்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ராமயா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.
ஜோக்கர் படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை.. நிறைய பேர் நம்பவே இல்லை.. அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் சார் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமா உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.
மும்பை , மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப்பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.” என்கிறார் ரம்யா பாண்டியன்