எல்லாமே நினைவில் பதிவதில்லை.உள்ளுணர்வு எதை ஏற்கிறதோ அதுவே நினைவில் நிலைத்து நிற்கிறது. அப்படி நிலைப்பது கண்ணீரைப் பொழிய விடுகிறது. அன்று அப்படிதான் . ’60 வயது மாநிறம்’ திரைப்படத்தின் முன்னோட்டமும்!
கலைப்புலி தாணுவின் தயாரிப்பு. பிரகாஷ்ராஜ் தகப்பன். ‘அல்ஜமைர் ‘நோயின் பாதிப்பு. பையன் விக்ரம் பிரபு. மாநிறமுள்ள அப்பனை தொலைத்து விட்டு தேடுகிறார். “காணாமல் போனதை தேடவில்லை. தொலைத்ததைத் தேடுகிறேன்”என்பார்.. எத்தகைய வலி இருக்கும் என்பதுதான் கதை.
“படத்தில் நடித்தபோது எனக்கும் அப்பாவுக்கும் இடையேயான எத்தனையோ சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. பொதுவா நான் ரீமேக் படங்கள் பண்றதில்ல.இதுதான் எனக்கு முதல் படம். தாணு சார் தயாரிப்பு.ராதா மோகன் சார் டைரக்ஷன்.பிரகாஷ்ராஜ் சார், கூடவே சமுத்திரக்கனி சார் இந்த மாதிரி காம்பினேஷன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்” என பேசத் தொடங்குகிறார் விக்ரம் பிரபு.
.” தாத்தாவுக்கு நன்றி சொல்லிட்டுத்தான் நடிக்க வந்தேன். என்னை ராதாமோகன் சார் வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார். இந்த படத்துக்குப் பிறகு அப்பாவுடன் நடிக்கணும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது.. இப்ப வீட்டில் இருந்து கிளம்பும் போது கூட “நாம எப்பப்பா சேர்ந்து படம் பண்ணப்போறோம்னு” அப்பா கேட்டார். “நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கணும்பா”ன்னேன் .அவர் கால் தூசுக்குக் கூட நான் வரமாட்டேன்” என உணர்ச்சி வயமாகி விட்டார்.
”நான் தொடர்ந்து தாணு சார் படத்தில் நடிப்பதற்கு காரணம் அவர் 110 சதவிகிதம் படம் கொடுக்கக்கூடியவர்.அரிமா நம்பி என்னை எந்த உயரத்துக்கு கொண்டு போனது என்பது எனக்குத் தெரியும்.அவரது படம் என்றால் தயங்கவே மாட்டேன்” என்றார் விக்ரம் பிரபு,
இயக்குநர் ராதா மோகனுக்கு இசைஞானியுடன் முதல் படம். வியப்புடன் அவரைப் பற்றிப் பேசுகிறார்.
“ஒரு சீனைப் பார்க்கிறார்
‘உலகத்தில் இறைவனைத் தேடுகிறான் ஒருத்தன் ! இவன் மனுஷனைத் தேடுகிறான் ‘இதானே கான்சப்ட். என்று அவரே பாடலுக்கான வரியையும் சொல்கிறார். சில சீன்களை இந்த இடத்தில் வை.அதை அங்கே கொண்டு போ.நான் மியூசிக்கில் இணைத்து விடுகிறேன் என்கிற ஐடியாவையும் சொல்கிறார்.இப்படி சினிமாவை பற்றிய முழுமையான நுணுக்கம் அவருக்கு இருக்கிறது” என்கிறார் ராதா மோகன்.
கலைப்புலி தாணு பேசுகையில் ” என்னுடைய நாற்பத்திஏழு வருஷ அனுபவத்தில் சந்திரகாந்தாவுக்கு பிறகு ஒரு தமிழ்ப்பெண் வரவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது .அந்த ஏக்கம் இந்த படத்தில் இந்துஜாவைப் பார்த்த பிறகு நீங்கி இருக்கிறது. அசல் தமிழ் பெண்ணு வேலூர் மாவட்டம். இந்தப்படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிப்பதாக இருந்தது. நானே தயாரிக்கிறேன்.நீங்களே நடியுங்கள் என சொல்லி உரிமையை நான் வாங்கினேன். இந்த படத்தில் கண்ணியவான் தண்ணியவான் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். அவருக்கு சரியான தீனி இந்த படத்தில் கிடைத்திருக்கிறது,”என்று குறிப்பிட்டார்.
“சிறப்பான நடிகர் நீங்கள் , ஒரு ரீமேக் படத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன” என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்.
“ஒரு நல்ல தமிழ்க் கவிதையை பிற மாநிலத்தவர் மிகவும் ரசித்து அவர்களது மொழியில் மாற்றம் செய்வது பெருமைதானே? கன்னடத்தில் வெளிவந்த ஒரு படத்தை ஒரு நடிகர் பார்த்து விட்டு வெகுவாகப் புகழ்ந்தார்.உடனே அந்தப்படத்தைப் பார்த்தேன் .பிடித்துப்போனது .மறுநொடியே உரிமையை நான் வாங்கி விட்டேன் .அந்தப்படத்தை தாணு தயாரிக்கிறார். எனக்குத் தயாரிப்பாளராக அனுபவம் இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறமை தாணு சாருக்குத்தான் இருக்கிறது அதனால் இந்த படத்தை அவரே தயாரிக்கட்டும் என்று கொடுத்து விட்டேன்” என்றார் பிரகாஷ்ராஜ்,