கலைஞர் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் வரமுடியும் . முட்டிப் பார்த்தாலும் அழகிரியால் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இன்றையை பொதுக்குழுவில் அது உண்மையாகிப் போனது.
சிறு சலசலப்புக் கூட இல்லாமல் மு.க. ஸ்டாலின் தலைவராகவும் , துரை .முருகன் பொருளாளராகவும் ஒரு மனதாக தெரிந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
“அண்ணாவும் கலைஞரும் கட்டி வளர்த்த கழகத்தின் கதவைத் தட்டிப்பார்ப்பதில் தவறில்லை”என்று கூறிய அழகிரியை கிட்டவே நெருங்கவிடமாட்டார்கள் என்பது தெளிவாகியது.
ஸ்டாலின் பேச்சில் சிறந்த மாற்றம் தெரிந்தது. பேசியே வளர்ந்த , வளர்க்கப்பட்ட மாபெரும் இயக்கத்தை கட்டி ஆள சரியான வழிகாட்டியாக இருப்பார் என்பது பேச்சில் புரிந்தது.
“என் உயிரினும் மேலான கலைஞரின் உடன்பிறப்புகளே !” என அவர் தொடங்கியபோதே சொற்சிலம்பம் ஆடவும் தெரிந்தவர்தான் ஸ்டாலின் என்பதை கூட்டத்தினர் கண்டு கொண்டார்கள்.
“நான் கலைஞர் இல்லை! அவரைப் போல பேசவும் தெரியாது அவருக்கு இருந்த மொழி ஆளுமையும் கிடையாது. ஆனால் முயன்று பார்க்கும் துணிவுடன் இருக்கிறேன்!
என்னை விட கழகம் பெரிது என்பார் தலைவர். எந்த தனிமனிதனையும் விட திமுக பெரியது,
தனி மனிதனை விட திமுகவின் உதயசூரியனே பெரியது.
‘எனக்கு அக்கா இருக்கிறார் ஆனால் அண்ணன் இல்லை. எனக்கு பேராசிரியர்தான் அண்ணனாக இருக்கிறார் “என்றுகலைஞர் சொல்லுவார்.
தலைவருக்கு பேராசிரியர்அண்ணன் என்றால் எனக்கு அவர் பெரியப்பாதானே!
அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 1௦௦ மடங்கு கஷ்டம். பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 2௦௦ மடங்கு கஷ்டம்!
தமிழகத்தைத் திருடர்களிடம் கையில் இருந்து காப்பாற்றியாக வேண்டும்.”என்றவர் மத்திய பாஜக அரசையும் விடவில்லை. கடுமையாகவே சாடினார்.
“தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே,
இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா!
முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா!
அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம்! இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு!
என் உயிரினும் மேலான தமிழினமே!
என் கடைசி மூச்சு உள்ளவரை… என் கடைசி இதயத் துடிப்புவரை… உனக்காக உழைத்திடுவேன்! உனக்காக போராடுவேன்! இனம், மொழி, நாடு, கழகம் இந்த நான்கையும் எப்போதும் காப்பேன்!” என்று தழுதழுக்கப் பேசினார் ஸ்டாலின்.