சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற பா.ஜ.க-வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தூத்துக்குடியில் விமானம் தரையிறங்கியபோது, ஒரு பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ‘பாசிச பாரதிய ஜனதா ஒழிக’ என ஒரு இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு உள்ளேயும் தமிழிசையை தொடர்ந்து வந்து அவர் கோஷமிட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் தமிழிசை புகார் அளித்தார்.தூத்துக்குடியை சேர்ந்த சோபியா என்ற அந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 23 வயதான சோபியா, கனடாவில் படித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,இது குறித்து இயக்குநர் பாரதிராஜா
வெளியிட்டுள்ள ஒலிநாடாவில் கூறியிருப்பதாவது,
என் இனிய சகோதரி தமிழிசைக்கு பாசத்துடன் பாரதிராஜா,
நீங்கள் தமிழகத்தின் பாஜ கட்சியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்கள் எல்லாம் மிகப்பெரிய மதிப்புமிக்க இலக்கியவாதியாக தேசிய சிந்தனையுள்ள குமரி ஆனந்தன் அவரின் புதல்வி என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நீங்கள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது, எதையும் நீங்கள் பெருந்தன்மையுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் கூட பல இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறேன். நமக்கு எதிரி என்று நாம் சிலரை நினைப்போம். நம்மை எதிரி என்று சிலர் நினைப்பார்கள். யாரும் யாருக்கும் எதிரியல்ல, கருத்து வேறுபாடு. ஜனநாயக அரசில் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உள்ளது. உங்கள் விமான பயணத்தில் உங்களுடன் பயணித்த சோபியா, தாய் மண்ணை விட்டு பிரிந்து வாழ்வியலுக்காக கனடா சென்று தான் பிறந்த மண்ணின் மானத்தையும் காத்து, புகுந்த மண்ணின் பெருமையையும் காத்தவள் சோபியா.சமீபத்தில் நடந்த தூத்துக்குடி சம்பவம் அவளை தான் பிறந்த மண்ணில் எவ்வளவு பாதித்திருக்க வேண்டும் என்ற வேதனையில், உரிமையில் அவர் ஒரு வீர தமிழச்சியாக தமிழிசைக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். நீங்கள் உங்கள் தகுதிக்கு, அவளை அழைத்து உங்கள் பக்கம் ஞாயங்களை கூறி அவளை சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா. அந்த வீரமுள்ள தமிழச்சி புகார் கொடுத்து அவளை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான விஷயம். அந்த பெண்ணை பற்றிய முறையீட்டு வழக்கை வாபஸ் பெற்று அந்த வீரமுள்ள தமிழச்சியை விடுதலை பெறச் செய்யுங்கள். இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது இவ்வாறு அவர் கூறியுள்ளார்