அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தால் என்ன கழுதை மேய்ந்தால் என்ன என்கிற கதையாகி விட்டது..
திமுக தொடர்ந்து அதிமுக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் சொல்லி வந்தாலும் முதல்வர் எடப்பாடியார் உளருவாயனுக்கு ஊமையனே மேல் என்பதைப் போல கம்முன்னு இருக்கிறார்.
சி பி ஐ ரெய்டு என்பதற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. திமுக தலைவர் ஸ்டாலினோ விடுவதாக இல்லை. நீதி மன்றம் செல்வதற்கு முடுக்கி விட்டிருக்கிறார்.
ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். எலி அழுதால் பூனை விட்ருமா என்கிற கதையாக நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும் விடக் கூடாது என முதல்வரை வற்புறுத்துவதாக தெரிகிறது.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி இருவர் மீதும் ஊழல் பட்டியல்களை திமுகவும் இதர கட்சிகளும் வெளியிட்டு பெரிய நெருக்கடியை கொடுத்திருக்கின்றன. இதையெல்லாம் சொல்லி எதிர்வரும் ஆபத்துகளை முதல்வரிடம் பன்னீர்செல்வம் சொன்னதாக பேசிக் கொள்கிறார்கள்.
ஆனால் முதல்வரோ “நடவடிக்கை எடுத்தால் அவர்கள் எதிர் அறிக்கைகளை விடுவார்கள்.அல்லது தினகரனோடு சேர்ந்தாலும் சேர்ந்து விடுவார்கள். அது நல்லதல்ல “என்கிறாராம்.
“நீங்கள் மூன்று வருட ஆட்சி பற்றியே கவலைப்படுகிறீர்கள் நான் அடுத்த தேர்தல் பற்றி கவலைப்படுகிறேன்.”என ஓ. பி எஸ் ,சொன்னதாக தெரிகிறது. ஆனால் அரசியலை அலசுகிறவர்களோ ‘நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்’ என்பதாகவே கருதுகிறார்கள் .மத்திய அரசு என்ன முடிவு சொல்கிறதோ அதன்படிதான் நடக்கும் .எதிர்க்கட்சிகள் மிரட்டுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.என்பது அவர்களின் கருத்து,